வியாழன், 16 டிசம்பர், 2010

Blaming Elders....

பெரியவர்கள் இந்தக் காலத்தின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று தொடர்ந்து நாம் சொல்லி வருகிறோம். அனால் அதற்கு பதில் அவர்கள் உலகத்தையும், அதன் தன்மைகளையும் நாம் அறிந்து கொள்ள முயல்வதில்லை. வாழ்க்கை என்பது ஒரு வேகமான ஓட்டம், அதில் தடைகளை தாண்டுபவருக்குத்தான் முதல் பரிசு என்று  ஊறிப்  போய் இருக்கும் உலகில் பெரியவர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜி இல்லாத ஒரு இயந்திரம் போல் பார்க்கப்படுகிறார்கள்.
பழைய கம்ப்யூட்டர், பிரிண்டர்,முதலில் வந்த  செல்போன், கருப்பு-வெள்ளை  டிவி, இது போன்ற பொருட்கள் தேவையற்றதாக பார்க்கபடுவதைப் போலவே, வயதில் பெரியவர்களும் பார்க்கபடுகிறார்கள் என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை. புரிந்து கொள்ளப் படாத அந்த உணர்வுகள், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட பழைய சிலபஸ் ஆக பாவிக்கபடுகிறது. அந்த உலகத்தின் குரல்கள், அதிர்ந்து ஒலிக்கும் இன்றைய தலைமுறையின் சத்தத்தின் முன்னால் சந்தடி இல்லாமல் ஒடுங்கிப் போகின்றன.
ஒரே விஷயத்தை நீளமாக பேசுகிற, சொன்னதையே திரும்பச் சொல்லுகிற, நவீன உலகின் அடையாளங்கள் தெரியாத மனிதரை நாம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வது இல்லை.காரணம் அந்த உலகத்தோடு நட்பு பாராட்ட நமக்கு விருப்பம் இல்லை. உண்மையில் பழைய மனிதர்களின் நட்பு, உலகை உண்மையாகவும், ஆழமாகவும் பார்க்க உதவுகிறது.அவர்கள், கருவிகளின் துணை இல்லாமல் சவால்களை எதிர்கொண்டவர்கள், ஆயுதங்களின் துணை இல்லாமல் காரியம் சாதித்தவர்கள். நாம் கால்குலேடரிலும், கம்யுட்டரிலும், தேடும் விஷயங்களை அனுபவமாக கையில் வைத்து இருப்பவர்கள்.
நாம் எந்த விஷயத்துக்கெல்லாம் சிறப்புக்  கொடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோமோ, அந்த விஷயத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல், சகஜமாக அதை வாழ்வியலில் பயன்படுத்தியவர்கள். குறிப்பிட்ட வயது வரை பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும், பிறகு, நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என்ற' மடை மாற்று' வேலைதான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது. பெரியவர்கள் உலகத்தோடு நமக்கு நட்பு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை உள்வாங்கிக் கொள்கிற அளவு நமக்கு பொறுமை இல்லை...நேரமும் இல்லை.
கணினிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு உலகத்தை தேடுகிற நாம், பெரியவர்கள் நட்பிலும் அதைத் தேடலாம். அப்படி நட்பு பாராட்டி ஆகப் போவது என்ன? நிறைய ஆகும். நீங்கள் யோசித்திராத பரிமாணங்கள் அது சொல்லித் தரும். சமூகத்தைப் பற்றிய உண்மைகளைச் சொல்லும், நெருக்கடியான நிலைமைகளை நிர்வாகம் செய்கிற அறிவைத் தரும்.
எனவே நண்பர்களே, காலையில்  வாகிங்  போகிற போது எதிரில் வேட்டியை மடித்துக் கொண்டு, வெள்ளை பனியனோடு நடந்து போகிற அந்தச் சாதாரண பெரிய மனிதரிடம் நட்பாகச் சிரியுங்கள்....அவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள்.பெரியவர்களைக் குறை சொல்லுகிற நேரத்தை, அவர்களைப் புரிந்து கொள்வதற்கு செலவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக