திங்கள், 13 டிசம்பர், 2010

புத்தக வாசிப்பு!!!!!

 ஒரு சிறிய நகரத்தில் படித்து விட்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருந்த எனது வாழ்க்கை  வட்டத்தைப் பெரிது படுத்தியது புத்தகங்கள் தான். பொதுவாக நானாகப்  போய் யாரிடமும் பேசும் இயல்பு எனக்கு இருந்தது இல்லை. வயது ஏற, ஏற  தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமானதே தவிர குறைய வில்லை. இப்போது நினைத்துப் பார்க்கிறேன்....எப்படித்தான் நமக்கு தைரியம் வந்தது என்று?.......
எனது  தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதில் நான் முக்கியப் பங்காக புத்தக வாசிப்பைத் தான் சொல்லுவேன். எங்கள் ஊர் லைப்ரரி, மற்றும் வீடு வீடாக வார இதழ், நாளிதழ் என்று நான் புத்தகம் தேட கூச்சப்பட்டதே இல்லை. அதன்பின் வாழ்க்கையின் நிறங்கள் மாற ஆரம்பித்தன! இதெல்லாம் என்னால் செய்ய முடியாதுப்பா' என்று ஓடி ஒளிந்த நான் ' கொடுங்க செஞ்சு பார்க்கிறேன்,,,,' என்று செய்ய ஆரம்பித்தேன் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த பின்னர், குழந்தைகளுக்கு பாடத்தோடு சேர்த்து நிறைய விஷயங்களை கற்றுத் தர முடிந்தது.

 சென்னை மாநகருக்கு வந்த பிறகு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாத நான் கார் ஓட்டக்  கற்றுக் கொண்டது, எவ்வளவு பெரிய  கூட்டங்களிலும் தைரியமாக எதைப் பற்றியும் பேசுவது, தனியே பயணிப்பது, தவறு என்றுத் தெரிந்தால் தைரியமாக அதைத் தட்டிக் கேட்பது  என என்னுடைய தன்னம்பிக்கை வட்டம் அதிகம் ஆனது.


  உலக அனுபவங்கள் பெறப் பெறத்தான் நம் தன்னம்பிக்கையின் அளவு உயர்கிறது. இதை வேறு வார்த்தைகளிலும் சொல்லலாம்.அதாவது விஷயங்கள் அதிகம் கற்றுக் கொள்ள, கற்றுக்  கொள்ள தன்னம்பிக்கை லெவல் கூடுகிறது!. 
புத்தகங்கள் சத்தமில்லாமல் நம் வாழ்வில் நிறையப் பேரை, நிறைய கரெக்டர்களை, நிறைய புது உலகங்களை,நிறைய புது அனுபவங்களை நமக்கு அறிமுகப்படுத்தும். இதனால் நாம் அனைத்தும் பெற்றது போல் ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் பெறுவோம்.

 வைரமுத்து கூட தனது கவிதையில்,
" தலையை குனியும் போது புத்தகம் படி...தலை நிமிரும் போது உலகம் படி" என்று அழகாக எழுதி இருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக