வியாழன், 28 அக்டோபர், 2010

பயணம் செய்ய விரும்பு !

இயற்கையின் பிரமாண்டத்தை வியக்கவும், மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், வீட்டின் நாலு சுவர்களுக்குள் பெறமுடியாத சில வாழ்க்கை தரிசனங்களைப் பெறவும் பயணங்கள் தேவை.
இன்றைக்கும் கூட ஆண்களைப்  போல் பெண்களால் தனியாகப் பயணம் செய்ய முடிவதில்லை. எத்தனையோ ஆண்கள், "போர் அடிக்குது", "ஸ்ட்ரெஸ் ஜாஸ்தியாயிடுச்சு" என்று ஒற்றைப் பையை எடுத்துக் கொண்டு டூர் கிளம்பி விடுகிறார்கள். டூர் வேண்டாம்...அட்லீஸ்ட் உறவினர் வீட்டுத் திருமணத்துக்காவது  பெண்களால் உற்சாகத்துடன் கிளம்ப முடியுமா?
இன்றைக்கும் கூட தனியே பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெறும் பத்து சதவீதம் தான் என்கிறது புள்ளி விவரம். பயணம் என்பது எல்லாக் காலங்களிலும் பெண்ணுக்கு பெரும் சுமையே. அவ்வையாரும், காரைக்கால் அம்மையாரும் தனிவழிப் பயணத்தின் ஆபத்துக்களுக்கு அஞ்சியே கிழதனத்தையும், பேய் உருவத்தையும் வரமாக வேண்டிப் பெற்றனர்.நமக்குத் தெரிந்து எந்த ஆண் பயணியும் கிழவனாகவோ...பேயாகவோ...வரம் கேட்டதில்லை.ஆணுக்கு பயணம் என்பது சிறகு.பெண்ணுக்கு அதுவே விலங்கு.
சிறிது காலத்திற்கு முன்னர் கூட ஒரு இருவது வயது பெண் தனியாக தெருமுனை கடைக்கோ...தோழிகள் வீட்டுக்கோ சென்றால், அவளின் பத்து வயது தம்பி துணைக்கு வருவான். மானசீக காரை சதா ஓடிக் கொண்டும், எதிரே இல்லாத கவாஸ்கருக்கு பந்து போட்டுக் கொண்டும் வரும் அந்தப் பயல், அவளுக்கு எப்படி பாதுகாப்பாக வருவான்?
ஆனால் இன்றைய இளம்பெண்கள் அதற்கெல்லாம் அஞ்சுவதே இல்லை.அவர்களின் தைரியம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பயணத்திற்கு ஏற்றார் போல வசதியாக உடை அணிவது,பழைய பஞ்சாங்கம் போல பெரிய ஹான்ட்பாக், கழுத்து நிறைய நகைகள் என்றெல்லாம் இல்லாமல் ஆண்களைப் போல சிறிய purse ,குட்டைதலைமுடி,ஜீன்ஸ், முரட்டுச் சட்டை  போன்ற அவர்களின் தோற்றம் 'எனக்கு தனிவழிப் பயணம் ரொம்பவே பழக்கம் ' என்பதை சொல்லாமல் சொல்கிறது.
அவர்களது வேலை நிமித்தமாக அடிக்கடி தனியே பெண்கள் பயணிக்க வேண்டி யுர்கிறது.தகவல் தொடர்புக்கு செல்போன், பயனதுகேற்ற உடைகள், திருட்டு பயம் தவிர்க்க டெபிட் கார்டு என்று அவர்களின் பயணமும், பாதையும் சுலபமாகியுள்ளது. இந்தப் பாதையில் இவர்கள் யாவருக்கும் முன்னோடியாக கல்லிலும், முள்ளிலும் ரத்தம் சொட்டச் சொட்ட முதலில் நடந்த பெண் பயணி அவ்வையாராகதான் இருக்க வேண்டும்...
 'என் மூட்டையை   எடுத்துக் கொண்டேன்
பொருட்களைக் கட்டிக் கொண்டேன்
மரம் வெட்டும் தச்சனிடம் தொழில்
கற்ற அவனது பிள்ளை
கோடரியுடன் காட்டுக்குச் செல்வது போல
நான் செல்கிறேன்
நான் எந்தத் திசை சென்றாலும்
அந்தத் திசையில்
எனக்கு சோறு கிடைக்கும்!'
                                     - அவ்வையார். புறநானூறு.

1 கருத்து:

  1. பெண்களின் பயணம் பற்றி இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம்..குட் போஸ்ட்..

    பதிலளிநீக்கு