புதன், 20 அக்டோபர், 2010

அவசர வாழ்க்கை..அனுபவிக்க இயலாத வாழ்க்கை!!!!!

இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று, அவசரம்!
வீடு, பணியிடம், பேருந்து, பள்ளி, கோயில், வங்கி, மருத்துவமனை, தியேட்டர்   , என எங்கும் அவசரம் பொங்கி வழிகிறது.  சிறியவர்கள், பெரியவர்கள் என பேதமில்லாமல் இந்த நோய்க்கு நம்மை ஒப்புக்கொடுத்து இருக்கிறோம்.
 
எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒரு போதும் நம்மை கேட்டுக் கொண்டதே இல்லை. அவசரம் வைரஸ் கிருமிகளை விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிடமே கைகால்கள்  தாமே உதறத் துவங்குகின்றன. முகம் சிவந்து விடுகிறது.உடல் நடுங்கத் துவங்குகிறது.கோபம், ஆத்திரம், கவலை, என்று உணர்ச்சிகளின் தடுமாற்றத்திற்கு மூல காரணமாக இருப்பது அவசரம் தான்.
 
சாலையோர சப்-வேயின் படிக்கட்டில் உட்கார்ந்து கையேந்தும் பிச்சைக்காரன் கூட இதை விட அமைதியாகவும் அவசரமின்றியும் தன் நாட்களை கழிக்கிறான். படுக்க இடமில்லாமல் சாலையில் உறங்குபவர்கள் கூட மாலை நேரங்களை ரேடியோ கேட்டுக் கொண்டும், பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு, யாவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
 
வேலை, பணம், ஆசைகள் என்று மாய மானைத் துரத்தித்திரியும் மத்திய தர வர்க்கம் எதையும் அடைய முடியாமலும் திரிசங்கு சொர்க்கம் போல மிதக்கிறது.அவசரம் அவர்களின் வயதின் மேன்மையை அழித்து விடுகிறது.தோற்றத்தில் மட்டுமின்றி, சிந்தனையிலும், செயல்பாட்டிலும் சலிப்பு தொற்றிக் கொண்டு விடுகிறது.
யோசிக்கையில் தோன்றுகிறது...நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். என்னதான் பணிசார்ந்த அவசரம் தவிர்க்க முடியாமல் போனாலும், எல்லா நேரங்களிலும் ஏன் இப்படி படபடப்பாகவும், நிம்மதியின்றியும் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை!
 
வண்ணத்துப் பூச்சி ஒரு பூவிலிருந்து தேன் எடுப்பதற்காக எங்கெங்கோ சுற்றி அலைகிறது.ஆனால் தேன் உள்ள பூவைக் கண்டு விட்டாலோ அதைச் சுற்றி வந்து உணர்கொம்புகளால் தேனை உறிஞ்சி அப்படியே கிறங்கிக் கிடக்கிறது.ஒரு துளி தேன் என்றாலும், அதன் சுவையை சுவையை ருசிக்கும் வண்ணத்துப் பூச்சியின் லயிப்பு நமக்கு ஏன் வருவதில்லை?

1 கருத்து: