ஞாயிறு, 17 அக்டோபர், 2010

எது அழகு?


"நான் அழகாக இருக்கிறேனா?" என்பது வெறும் கேள்வியாக இல்லாமல் ஓர் ஆதங்கமாகவே  நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது.வேறு எந்தச் செயலையும் விட ,ஆணும் பெண்ணும் தான் அழகாக இருப்பதாக காட்டிகொள்வதில் தான் அதிகம் ஈடுபாடு கொள்கிறார்கள்.
உண்மையில் நாம் அழகாக இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும் போது  ,நமக்கு இருக்கும் ஒரே துணை கண்ணாடி தான்.கண்ணாடியில் தெரியும் நம் உருவத்துடன் பேசத்துவங்குகிறோம்.கண் ஏன் இப்படி இருக்கிறது?உதடு ஏன் உலர்ந்திருக்கிறது?கேசம் ஏன் கலைந்து கிடக்கிறது என உடலை உற்று நோக்கத் துவங்குகிறோம்.
அழகு கண்ணாடியில் இல்லை; காண்பவரின் கண்களில் தான் இருக்கிறது என்று புரியத் துவங்கும் பொது, அழகின் மீதான அக்கறையைக் கடந்து வயதுக்குள் வந்து விடுகிறோம்.அப்போது மனிதர்களை விடவும் இயற்கை மிக அற்புதமானது என்று நமக்கு புரிகிறது.
உண்மையில் நாம் ஒவ்வொருவரும்   தனித்துவமான அழகுடன் தான் இருக்கிறோம்.இருக்கிறோம்.அதை நாம் உணர்வதில்லை.அழகைப் பற்றிய நம் மதிப்பீடுகளில் பெரும்பான்மை அர்த்தமற்றவை.அன்பும், நட்பும், அடுத்தவர் மீதான அக்கறையும், எதையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய பக்குவமும், உள்ள யாவரும் அழகானவர்களே! சில தருணங்களில் இயல்பாக வெளிப்படும் அழகுக்கு நிகர் எதுவுமே இல்லை. அதற்கு கீழ்க்கண்ட பாடலே உதாரணம்.
ஆடும்பொழுது மயில் அழகு
ஓடும்பொழுது மான் அழகு
தாவும் பொழுது முயல் அழகு
கூவும் பொழுது குயில் அழகு
பாயும் பொழுது புலி அழகு
மேயும் பொழுது பசு அழகு
நடக்கும் பொழுது கால் அழகு
கடக்கும் பொழுது நதி அழகு
அணியும் பொழுது நகை அழகு
தணியும் பொழுது சினம் அழகு
அரைக்கும் பொழுது சந்தனம் அழகு
உரைக்கும் பொழுது தங்கம் அழகு
காணும் பொழுது தாய்மை அழகு
பேணும் பொழுது ஒழுக்கம் அழகு
சிரிக்கும் பொழுது குழந்தை அழகு
தரிக்கும் பொழுது முடி அழகு
புலவர் இராச  ரத்தினம்.
மழை நாள் ஒன்றில் ஒரு குடைக்குள்ளாக மூன்று பேர் ஒண்டிக்கொண்டு நனையாமல் போய்க்கொண்டு இருந்தார்கள். மழையின் ஈரம் படிந்த முகங்கள், மெல்லிய புன்னகை, நனைந்து கலைந்த கேசம், காற்றையும் சாரலையும் பார்த்த  அவர்களது மகிழ்ச்சி, என அழகு  அழியாத சித்திரமாக அவர்களுக்குள் இருந்தது.
இது போல எத்தனையோ நிமிடங்களில் மனிதர்கள் சொல்லமுடியாத பேரழகுடன் இருப்பதைக் காணலாம்.ஒரியப் பழங்குடி மக்களிடம் ஒரு கதை இருக்கிறது. ஒரு காலத்தில் நிறங்கள் தங்களுக்குள் எது சிறந்தது என சண்டையிட்டுக் கொண்டனவாம்.அப்போது வானில் திடீரென பலத்த சத்தத்துடன் மழை பெய்யத் துவங்கியதாம்.நிறங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டு நெருங்கிக் கொண்டன.உடனே ஏழு நிறத்தில் ஒரு வானவில் உண்டானதும், நிறங்கள் அதைக் கண்டு ஆச்சரியம் கொண்டனவாம்.
அப்போது வானிலிருந்து ஒரு குரல் சொன்னது....."ஒவ்வொரு நிறமும் அதனதன் வழியில் தனித்துவமானதுதான்.ஆனால் அத்தனையும் விட அழகானது இப்படி ஒன்றாக இருக்கும் வானவில் நிறம் தான் "..என்றது.அப்போது தான் நிறங்களுக்கு நிஜம் புரிந்தது. மனங்களுக்கும்  புரியும் என்பதில் சந்தேகமில்லைதானே?

1 கருத்து:

  1. அழகுக்கு வயதாகிவிடும்... மனதிற்கு ஆவதில்லை... மனம் மனிதன் வாழும் வரை நிரந்தரம்...

    பதிலளிநீக்கு