திங்கள், 25 அக்டோபர், 2010

கலாச்சாரத்தை உரசிப் பார்க்கும் 'LIVING TOGETHER ' !!!!!!!!!

'திருமணம்...குடும்பம்...என்பதெல்லாம் சிதைந்து கொண்டே இருக்கிறது' என்றொரு பேச்சு தொடர்ந்து ஒலித்தபடியேதான் இருக்கிறது. இதைப் பற்றி யோசிக்கும் போது, எங்கேயோ...எப்போதோ...கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது...
நீளமான கூந்தல் அழகில் எப்போதுமே லயித்திருப்பவள் அவள். அதுதான் அவளுக்கு பெரிய சொத்து. ஆனால், அதைப் பராமரிக்க ஒழுங்கான சீப்பு கூட அவளிடம் இல்லை. கணவனிடம் இருக்கும் மிகப் பெரிய சொத்தே அவனது கைக்கடிகாரம் தான். ஆனால் அதற்கு சரியான ஸ்ட்ராப் இல்லாததால்...அதைக் கையில் வைத்துதான் அழகு பார்க்க முடிகிறது.
ஒரு நாள்...அழகான ஸ்ட்ராப்போடு மனைவி வந்து நிற்க...விலை உயர்ந்த சீப்பில் எதிரில் வந்து நின்றான் கணவன். ஆனால், சீவுவதற்குதான்   அவளிடம் நீளமான முடியில்லை. அதை வெட்டி விற்றுத்தான் ஸ்ட்ராப் வாங்கி வந்திருந்தாள் மனைவி. அதே நேரம்... அதைக் கட்டுவதற்கு இவனிடம் கடிகாரமும் இல்லை. அதை விற்றுத்தான் சீப்பையே வாங்கி வந்திருந்தான்.
நெஞ்சை நெகிழ வைக்கும் 'டச்சிங்கான' கதையாக இருக்கிறதல்லவா...?
இத்தகைய அன்னியோன்யம் தானே... வாழ்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தப் புரிதல் இல்லாதபோது...பிரச்சினைகள் எட்டிப் பார்க்கத்தான் செய்யும்!  அதற்காக, 'சிஸ்டமே தவறு'  என்று ஒரேயடியாக போட்டு உடைத்து விட முடிமா...?
நன்கு யோசித்துப் பார்ப்போம்...
'ஒருவனுக்கு ஒருத்தி  என்று  கூடி வாழ வேண்டும்'  என்று மனித இனம் தோன்றிய போதே யாரவது சட்டம் போட்டு வைத்தார்களா...இல்லையே...!
நாகரிகம் வளர வளர நாமாக பார்த்து முடிவு செய்ததுதானே திருமணம்,  குடும்பம், குழந்தை என்பதெல்லாம்.  ஆனால், இது வாழ்க்கைக்கு மிகவும் வசதியானதாக இருக்கிறது என்பதால்...ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாமும் கடைப் பிடித்து வருகிறோம்.

கோடு, வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி...கொள்ளும்போது கொள்ளு...தாண்டிச் செல்லும்போது செல்லடி...' -
இப்படி ஒரு பாடலில் கண்ணதாசன் எழுதி இருப்பார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் நாமே போட்டுக் கொண்ட கோடுகள் தான். ஆனால் ஒரே நாளில் போட்டுக் கொண்டதில்லை...காலம் காலமாக அனுபவித்துப் பார்த்து...'இதுதான் சரி' என்று போட்டு வைத்த கோடுகள்!
'அடுத்தவன் சொன்னா கசக்கும்...கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்'
 எனவே எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

 இதைக்குறித்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில் "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்கிறோம். அப்படி வாழ்வியலை கற்றுக்கொள்ளும் பள்ளியாகவும், கற்றுத்தரும் ஆசிரியராகவும் இருப்பது குடும்பம் என்னும் வலுவான அமைப்புதான்,அந்த அமைப்பு இருவர் ஒப்புக் கொண்டு உறவுகளின் துணையோடு திருமணம் செய்து கொள்கிற போதுதான் உருவாகும், அதுதான் தழைக்கும்.ஆனால், 'எங்கள் இருவருக்கும் சில காரணங்களால் சேர்ந்து வாழும் கலாசாரம் பிடித்து இருக்கிறது: அதனால் சேர்ந்து வாழ்கிறோம்' என்கிற வாழ்க்கை முறையில் என்ன நிம்மதி கிடைத்து விடும்? 'என்றைகாவது ஒரு நாள் பிரிந்து விடப் போகிறவர்கள் தானே நாம்..?என்கிற உறவில் ஆழமான காதல், அன்பு வராது" என்கிறார். 
இரண்டாவது இந்த உறவில் வளரும் குழந்தைகள் அனாதையாக்கப்படும்: அல்லது தனித்து வாழும் சிங்கிள் பேரென்ட் குழந்தைகளாக வளரும்.அப்படி வளரும் குழந்தைகளின்  மனநிலையும், சமூக வளர்ச்சியும் கவலைக்குரியதாக மாறும், என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

நன்மை என்று பார்க்கும் போது, இந்த வாழ்க்கை முறைப் பற்றி சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ் சொல்லுகிறார், "இந்தியாவில் குடும்பம் என்கிற அமைப்பு இப்போது மிகவும் இறுக்கமானதாக இருக்கிறதே ஒழிய, இணக்கமானதாக இல்லை'என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தினம், தினம் பதிவாகும் விவாகரத்து, குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை அதற்கு சான்று.இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷமில்லாமல், சடங்குக்காக சேர்ந்து வாழும் திருமண வாழ்க்கைக்கு மாற்றாக, மாறி வரும் சமூகச் சூழலில் வயது வந்த ஆணும், பெண்ணும், 'நாம் சேர்ந்து வாழலாம்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாழ்வது குற்றம் கிடையாது.இது ஆரோக்கியமானதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்" என்கிறார் யதார்த்தமாக!

living  together  வாழ்க்கையை சட்டம் எப்படி பார்க்கிறது என்றால்,"இதற்கு சட்ட ரீதியாக எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால், இப்படி சேர்ந்து வாழும் போது, பெண்கள் பாதிக்கப்படும் சமயத்தில், அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு நிச்சயமாக உண்டு. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்   நியாயம் கேட்கலாம்.
மற்றபடி, ஒருவர் பிரிந்து செல்லும்  பட்சத்தில் குழந்தையை முன்னிறுத்தி ஆண் மீது உரிமை கோர இயலுமா, குழந்தைகளின் சொத்துரிமை எப்படி, போன்ற விஷயங்களுக்கெல்லாம் சட்ட ரீதியான தீர்வுகள் ஏதும் இதுவரை இல்லை. ஒரு வேளை   இந்த 'living together ' விஷயம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் போது...அதற்கான சட்டங்களும் வரலாம் "என்று உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்களில் ஒருவரான அஜிதா கூறுகிறார்.

சேர்ந்து இருப்பதற்கும், சேர்ந்து வாழ்வதற்கும் அர்த்தங்கள் வேறு! காலம்தான் அதைப் புரிய வைக்க வேண்டும்!

1 கருத்து:

  1. வணக்கம் தோழர்,
    "குடும்பம்" குறித்து நாம் மனம் விட்டு பேச வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது. குடும்பத்தை இப்போது இருக்கி8ற நிலையில் அப்படியே ஏற்ப்பதா? இல்லை கட்டுடைப்பதா? இல்லை இரண்டுக்கும் ஊடான ஒரு நிலையை எடுப்பதா? மனம் திறந்த விவாதம் தேவைப் படுகைறது. முடியும் போது எனது ப்ளாக் பாருங்கள்
    www.eraaedwin.blogspot.com

    பதிலளிநீக்கு