புதன், 29 செப்டம்பர், 2010

ரியாலிட்டி ஷோ !!!!!!

நமக்கு நிச்சயம்  பேச்சுரிமை வேண்டும், நம் பிரச்சினைகளைப் பகிரவும்,உரிமையைப் பெறவும் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.ஆனால் அதை யாரிடம்,எப்போது,எதற்காக,என்னென்ன பேசலாம் என்ற வரைமுறை உள்ளது.நம்மில் பலரும் இது தெரியாமல்,பயனில்லாத,சபை அறியாத வீண்  பேச்சை தொலைகாட்சிகளில் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
டி.வி மோகத்தால் தூண்டப்படும் இந்த அசட்டுத்தனத்தை,மீடியா காசாக்கிகொள்கிறது என்பதைத் தவிர இதில் வேறந்த பயனும் இல்லை.அதை விட நாம் வாய் மூடி மௌனமாய் இருப்பதே மேல்.
நம்மை காமெரா முன்னால் பேசத்தூண்டுவது எது?எப்படியாவது டி.வி  இல் தலை காட்டிரணும்  என்கிற அல்ப ஆசைதான். இதில் தப்பில்லைதான்.ஆனால் எடிட்டிங் சமயத்தில் நடப்பது என்ன?ஒரு மேடையும்,கையில் மைக்கும் கிடைத்த உடன் ஒரு உணர்ச்சி வேகத்தில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
"வாவ்!சூப்பர்!ஹேட்ஸ் ஆப்! " என்றெல்லாம் சுடச்சுட பாராட்டப்பட்டு,கைதட்டல்களும் கிடைத்ததும்,போதை மெல்ல ஏற ஆரம்பிக்கிறது.
"அப்புறம்...என்ன நடந்தது? ரியல்லி?  கமான்! ஓப்பனா பேசுங்க!"என்று உசுப்பல்கள் தொடரவும்,கட்டுப்பாட்டை இழந்து எமோசனல்  ஆகி , அடக்க முடியாமல் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள்.நிகழ்ச்சிக்கு முன்  சொல்ல  நினைத்தது ஒன்று! நிகழ்ச்சியிலே சொல்லி முடித்து ஒன்று!
இந்த நிகழ்ச்சியிலே  பங்கு கொண்டு பேசிய அனைவருக்குமே அக்கம்பக்கத்தினர்,உறவினர்,நண்பர்கள்,அலுவலக ஆட்கள் என நிறையப் பேர் இருக்க கூடும்.இந்த நிகழ்ச்சிக்குப் பின்  நம்மைப்  பற்றின அபிப்ராயம் அவர்களிடம் எப்படி இருக்கும்?
கதை அல்ல நிஜம்

திங்கள், 27 செப்டம்பர், 2010

தன்னம்பிக்கை...தலைக்கனம் அல்ல!

இன்று உலகின் புகழ் பெற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை கட்டி ஆள்கிறார்கள் பெண்கள்.நிமிர்ந்த நன்னடையும் ,நேர்கொண்ட பார்வையுமாக வளைய வருகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு சமுதாயம் குத்தும் முத்திரை "தலைக்கனம்" பிடித்தவள் என்று! ஏனிந்த குற்றச்சாட்டு?ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து தன் திறமையால் மட்டுமே இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ள பெண்களை நோக்கி குற்றச்சாட்டுக்களை வீசுவது நியாயமே இல்லை.ஒரு காலத்தில் பெண்கள் தங்களை உயர்த்திக்கொள்ள வழி தெரியாமல்,கூட்டுக்குள் நத்தையாக சுருங்கி கொண்டார்கள், மிகச்சிலரைத்தவிர..ஆனால் இப்போதுள்ள பெண்கள்
 தங்களை மதிக்காத உறவுகளையும்,சமூகத்தையும் துச்சமாக ஒதுக்குகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.இது புரியாமல்' பெண்ணின் மனம் ஆழம்','அதை அறிவது கடினம்' என்று கதை பேசிக்கொண்டு இருக்காமல் அவர்கள் பீலிங்க்ஸ்   ஐ புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு நாமும் மற்றவர்களைப் போல "அவ முன்ன மாதிரி இல்ல,சம்பாதிக்கிற திமிர்,யாரையும் மதிக்க மாட்டேங்கறா     "போன்ற குற்றச்சாட்டுக்களை வேலைப் பார்க்கும் பெண்ணின் மீது வீசுவதை தவிர்க்க வேண்டும்.
 இப்போதுள்ள தலைமுறையினர் தங்களைத் தாங்களே தட்டி,தட்டி முன்னுக்கு வந்துள்ளார்கள்.
எனவே அவர்களின் தன்னம்பிக்கையைத் தவறாக புரிந்து கொள்ளாமல்,அந்தப் பட்டாம்பூச்சிகளைத் தட்டிக் கொடுத்து ரசிப்போம்!!

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பெண்களின் சிறை அறைகள்!!!!

காலோடு தலை தெரியாமல் போர்வைக்குள் தஞ்சம் புகுந்த காலமெல்லாம் பெண்களுக்கு நீடித்தது இளமை வரைதானே??? 'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே...காலம் இதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே...' என்ற பத்மினியின் பழைய சினிமா பாடலின் படி குழந்தையாக இருந்தவரை மட்டுமே நம்மை தூங்க செய்தார்கள்.அதன் பின்..?
வாழ்க்கைப் பயணத்தில் பிரியமான விஷயங்களை இழப்பது இயல்பு.ஆனால், இப்படி இழந்த பட்டியல் ஆணுக்கானதை விட பெண்ணுக்கு எப்போதுமே மிக அதிகம்.தூக்கத்தை தொலைக்கிறோம்.தோழிகளை இழக்கிறோம்; அடையாளங்களை,ஆசைகளை,கனவுகளை,பிரியமானவற்றை,கவிதை எழுதுவதை,பாஸ்கட் பால் ஆடுவதை,சத்தம் போட்டு சிரிப்பதை என்று பல நூறு விஷயங்களை நடுவிலேயே விட்டு விட்ட எத்தனை,எத்தனைப் பெண்கள்????
விட்டு விடப் பெரிய காரணம்....நம் வீடுகளின் அக்கினி மொழியில் இருக்கும் சிறிய சமையல் அறைகள் தன.அரைப்பதும்,கரைப்பதும்,போதிப்பதும்,பொறிப்பதும்,வருப்பதும்,வடியபோடுவதும்,வேகவைத்து உரிப்பதுமாக திரும்ப திரும்ப நிகழும் சமையல் அரை வேலை,கையில் அள்ளிய நதி நீர் போல் நம் கண் முன்னே நம் வாழ்வின் நேரங்களை எல்லாம் நம்மிடமிருந்து  ஒழுகச் செய்து விடுகின்றன.
நல்ல வழியாக இந்த முப்பது ஆண்டுகளில் மிக்சி ,கிரைண்டர் ,குளிர்சாதனப் பெட்டி,காஸ் அடுப்பு என நம் சமையல் அறையில் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.ஆனாலும் மாறாதது பெண்களின் மூலையில் எல்லாப் பகுதிகளிலும் ஓடிக்கொண்டு இருக்கும் சமையல் செய்திகள்.
'சமையல் வேலைப் பகிர்வு என்பது குடும்பத்தின் ஒவ்வொரு  நபருக்குமான பொறுப்பு' என்ற உணர்வை உருவாக்குவது மட்டுமே பெண்ணின் மீது காலம் சுமத்திய இந்த கல்வாரிப் பயணத்தை எளிதாக்கும் வழி!

உதிர்ந்திடும் சருகுகள்!!!

வயதின் சுருக்கங்களுக்குப் பின்னே
வாழ்வின் பெருக்கங்கள்
வாழ்ந்ததற்கு  அடையாளமாக...
கவனித்துக்கொள்ள  மட்டுமே  நாங்கள்
கவனிக்கப்பட அல்ல,
 
வீசப்படும் வார்த்தைகளை
வலிக்காமல்
தழுவி எடுத்துகொள்ளப்
பழகிவிட்டோம்.
 
சுமந்து எம்மை மறுநாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்
 தள்ளாடும் நாட்கள்!
 
முதிர்ந்ததும் உதிர்ந்து விடும்
 மந்திரம்  தெரியவில்லை.
முடியாதவற்றிலிருந்து  ஒதுங்கும்
இங்கிதமும் தெரியவில்லை.
 
மனவலியின் அழத்தத்தில்
உடல் வலி மறக்கிறோம்.
உடல் வலியின் உக்கிரத்தில்
 மனமிருப்பதையே மறக்கிறோம்.

புதன், 22 செப்டம்பர், 2010

நீதித்துறையின் அநீதி!!!!

ஒரு நாட்டின் அஸ்திவாரமே நீதித்துறை தான்.ஆனால் அந்த அஸ்திவாரமே ஆடிக்கிடக்கிறது.
1996 ஆம் ஆண்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை சேர்ந்த முகமது என்னும் பத்தாம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வை எழுதிவிட்டு விடுமுறைக்காக உறவினர் வீடிற்கு சென்றான்.அங்கு லஜ்பத் நகரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.அபோது அவனுக்கு வயது 15. தனது படிப்பையும்,வாலிபத்தையும் 14 வருடங்களாக தொலைத்த அந்த வாலிபனை,கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் 'நிரபராதி'என்று நீதி(!) மன்றம் தீர்பளித்துள்ளது.இடைப்பட்ட காலத்தில் அவன் கைதான அதிர்ச்சியில் அவனது தந்தை,அக்கா  இருவரும் இறந்து போனது சோகத்தின் உச்சம்.
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கபட்டு விடகூடாது' என்றெல்லாம் வக்கனையாக பேசும் அரசியல்வாதிகளே...நீதிமான்களே...ஒரு நிமிடம் யோசியுங்கள்.உங்களின் நீதி..ஆள் பலமும்,பணபலமும் இல்லாத அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கையில் மட்டுமே விளையாடிக்கொண்டு இருக்கிறதே...ஏன்?
அதே போல் தான் போபால் விஷவாயு கசிவு காரணமாக பல்லாயிரக்கணக்கான பலி கொண்ட வழக்கின் தீர்ப்பு வெறும் இரண்டாண்டு சிறைத்தண்டனையும்,கொஞ்சம் அபராதபணமும் தான். 

சினிமாவில் கிழட்டு கதாநாயகர்களின் அட்டகாசம்!!!!!

திரைப்படம் என்பது அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்கப்படும் ஒரு பொழுது போக்கு மீடியா.ஆனால் அதிலும் ஆணாதிக்க சிந்தனை ஓங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
 பேத்தி வயதில் இருக்கும் இளம்பெண்களோடு டூயட் பாடும் கதாநாயகர்கள் தான் நடிகர் திலகம்,உலக மகா நாயகன்,புரட்சி கலைஞர்,என்றெல்லாம் விளிக்கபடுகிறார்கள்,
ஏன் விஜய்,சூர்யா,அஜீத் போன்றோர்கள் குஷ்பூ,அம்பிகா,ராதிகா இவர்களோடு ஜோடியாய் ஆடினால் நங்கள் மட்டும் பார்க்க மாட்டோம் என்றா சொல்கிறோம்?அட போங்கப்பா...

இவர்களைப் போன்றவர்களின் ஆணாதிக்க மனோபாவம் தான், மகள் வயதில் இருக்கும் பெண்ணிடமும்,தனக்கு கீழே கல்வி கற்கும் மாணவிகளிடமும் தவறு செய்யத் தூண்டுகோலாக அமைகிறது.
!”  செமகட்டை! சூப்பர் பிகர்! சரியான துண்டு! என்பன போன்ற சமூக வார்த்தைகளின் புழக்கத்திற்கு மூலகாரணம் தமிழ் சினிமா என்பதை நாம் எப்படி மறுத்துவிட முடியும்?
தமிழ்சினிமா பெண் உலகத்தை இத்தனை இழிவு செய்த பின்பும் அவர்களுக்கு எவ்விதமான கோபமும் ஏற்படவில்லை யென்பது ஏன்?
ஒருவகையில் பெண்கள் கூட இதை ஏற்றுக்கொள்கின்றார்களா? அல்லர் அவர்களின் உளவியல் என்பது ஆணாதிக்க சிந்தனைகளினால் திசை திருப்பப்பட்டிருக்கின்றதா?
சினிமா நமக்கு மெசேஜ் சொல்லும் மீடியா அல்ல என்று சிலர் கூறினாலும்,
உளவியல்படி எந்த ஒரு கருத்தும் திரும்ப திரும்ப அழுத்தமாக கூறப்படுமாயின், அது நம் மனதில் நிச்சயமாக பதியத்தான் செய்யும்.சினிமா வெறும் என்டர்டைன்மென்ட் என்று கூறினாலும் நம்மில் பெரும்பாலோனோரின் பொழுது போக்கு...மீடியாக்களும்,சினிமாவும் தானே?
எனவே இந்த சினிமாகாரர்கள் திருந்தாவிட்டாலும் நாமாவது நம் வருங்கால சந்ததியினருக்கு நல்லதை எடுத்துரைக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.ரெண்டுங்கெட்டான் வயதில் இருக்கும் நம் பிள்ளைகளிடம்,சினிமாவில் காட்டுவது எதுவும் நிஜம் அல்ல,ஆணோ,பெண்ணோ,  ஒத்த வயதில் புரிதலோடு இணைவதே நல்ல உறவுக்கு அடையாளம் என்று கூறுவோம்.
பணத்துக்கு ஆசைப்பட்டு உடல் தெரிய ஆட்டம் போடும் நடிகைகளை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் எடைபோடக் கூடாது என்று எடுத்துரைக்க வேண்டும்.ஒருசில பெண்களை இவ்வாறு மீடியாவில் காட்டுவதால் தான், நம் வீட்டு ஆண் குழந்தைகள்,   "பெண்கள் கேலிக்குரியவர்கள்,மனதில் வக்கிரமான ஆசை இருப்பதால்  தான் இவ்வாறு உடை அணிகின்றனர்...எனவே நாமும் ஏன் அவர்களை கேலியோ,கிண்டலோ பண்ணக்கூடாது" என்று தவறாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் கஷ்டங்கள்,அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது என்று புரிய வைப்பது நம் கடமையாகும். ஒரு தாய்  என்ற முறையில் நான் என் மகனுக்கு அவ்வாறு கற்றுத தருகிறேன்.
பெண்ணைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு மீடியா தவறாக சொல்லிகொடுக்கும் முன்பே நாம் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பது மேல்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மனம் என்னும் அடிமை...


இன்று ஒரு தொலைக்காட்சியில் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு கேட்க நேர்ந்தது. அவர் கூறிய அருமையான நீதிக்கதை அது.ஒரு நாட்டில் அரசர் ஒருவர் வெகு சிறப்பாக ஆண்டு கொண்டு இருக்கிறார்.அவருக்கு வாய்த்த ஒரு அடிமை அவருக்குத் தேவையான எல்லாப்  பணிகளையும் மிக அருமையாக செய்து அவரிடம் நற்பெயர் பெறுகிறான். அவனுடைய சேவையில் மகிழ்ந்த அரசர் ஒரு நாள் அவனிடம் "உனக்கு என்ன வேண்டுமோ என்னிடம் கேள், நான் அதை நிறைவேற்றி வைக்கிறேன்" என்றார்.
அவனும் சிறிதும் யோசிக்காமல் மன்னரே நான் உங்களைபோல அரசராக தர்பாரில் ஒரு நாள் மட்டும் வீற்றிருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.
அதைக் கேட்ட அரசர் அதிர்ந்து போனார்.இருப்பினும் சற்று சுதாரித்துக்கொண்டு "சரி அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டு,தன் அமைச்சர்களிடம் "அந்த அடிமை அரசரானால் அவன் ஆணையிடும் எல்லா  கட்டளைகளையும் எனக்கு நிறைவேற்றுவது போலவே நிறைவேற்றவேண்டும்" என்று கூறினார்.
அடிமையும் அரசர் ஆனான்.அவன் பதவியேற்ற மறுகணமே அரசரின் தலையைத் துண்டிக்க  வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.அனைவரும் அதிர்ந்தனர்.ஆனாலும் அவன்தானே இப்போது அரசன்?..எனவே வேறு வழியில்லாமல் அவன் கட்டளைப்படி தண்டனையை நிறைவேற்றினர்.அதன் பின் அவனே மீதியான காலங்களில் அரசராக இருந்தான்.இது ஒரு விபரீதக் கதைதான்.
இதை போன்றதுதான் நம்முடைய வாழ்கையும்.இந்த கதையில் வருவது போல நாம் தான் அரசர்கள்.நம்முடைய மனம்தான்  அந்த அடிமை. நம்மில் நிறையப் பேர் அந்த அரசனைப் போல மனம் நமக்கு விரும்பினதைச் செய்தவுடன்,அந்த மனதை அரசராக்கி விடுகிறோம்.ஆனால் அதன் பின் வரும் விளைவுகளைப் பார்த்தால், நாமும் அந்த அரசனைப் போல செத்து விட நேர்கிறது..ஆம்,மனம் என்னும் அடிமை சொன்னவாறு செய்தால்,நம்முடைய தகுதி,ஆளுமைத்திறன்,பாரம்பரியம் எல்லாமே செத்து விடுகிறது.
நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாம் விழித்து இருக்கும் போது எடுக்கப்பட வேண்டும்.மனம் என்னும் அடிமையின் வசம் ஒப்படைத்த பின்னர் நமக்குள் இருக்கும் நியாய தர்மங்கள் செத்து விடும்.
எனவே  தான்  குடிப்பழக்கமோ,புகைப்பிடிக்கும் பழக்கமோ முதலில் ஆரம்பிக்கும் போது நம்  அறிவு அதை ஏற்றுக்கொள்ள மறுத்து உடலின் வழியே வெளித்தள்ளுகிறது. ஒவ்வாமை ஏற்படுகிறது.அதையும் மீறி நாம் மனம் சொன்னபடி செய்தால் அந்த அரசரைப்  போல செத்தவர்களாகி விடுவோம்.
         "கண் போன போக்கிலே கால் போகலாமா...
           கால் போன போக்கிலே மனம்  போகலாமா..."

இது பண்டிகைக் காலம்!!!!

அனைவரும் போனஸ் கிடைத்த கையோடு  ஷாப்பிங் செய்ய,பொருட்கள் வாங்க  என்று படுபிசியாக போகும் நேரம்...கடைகளில் வண்ண,வண்ண ஆடைகள்,நகைகள்,இன்னும் எல்லாவிதமான பொருட்களும் இழுக்கத்தான் செய்யும்.அதற்காக கண்ணை மூடிக்கொண்டு இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் வாங்கி குவித்துவிட்டு "ஆத்திரத்தில் காரியம்,நிதானத்தில் சங்கடம்"என்று பிற்பாடு நெளிய வேண்டுமா ?
பொருட்கள் வாங்குவதில் தேவை,வசதி,ஆடம்பரம்,என்று மூன்று வகையாக நிபுணர்கள் பிரித்து இருக்கிறார்கள்...இதில் தேவை என்பதை எவ்வளவு அழகாக முன்னிறுத்தி இருக்கிறார்கள்?
'இந்தப்பொருள் இல்லாமல் நம்மால் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்றால்,கண்டிப்பாக அதை வாங்கலாம்.முடியும் என்றால் தள்ளிபோடுங்கள்.அதை விடுத்து எல்லாவற்றையும் வாங்கி குவித்தால் பிறகு ஒவ்வொரு மாதமும் போகி தான் கொண்டாடனும்!!!!!
'மனைவி செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் சம்பாதிப்பவரே  சிறந்த கணவர்,கணவரின் வருமானத்துக்கு உள்ளாக     செலவு செய்பவரே சிறந்த மனைவி' என்பார்கள்!!!!!!!!

எதற்கெடுத்தாலும் டூ வீலர் தான்!!!!

டூ வீலர் ஓட்டும்  இல்லத்தரசிகளே..வேலைக்கு போகும் பெண்களுக்கும்,கூட்டுகுடும்பத்தில் இருப்பவர்களுக்கும்  வேலைச்சுமை அதிகம் இருக்கும்.அவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை செய்து முடிக்க முடியாது என்று டூ வீலர் வைத்துகொள்ளலாம்,தப்பில்லை.ஆனால் தனிக்குடும்பமாக   இருக்கும் பெண்களுக்கு கணிசமான அளவு நேரம் கிடைக்கும்.எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும்,மதியம் லஞ்ச் கொடுப்பதற்கும்  என்று எதற்கு எடுத்தாலும் டூ வீலரை  பயன்படுத்தாதீர்கள்.அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பதாக  நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.  அது தவறு.அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்காது,மாறாக சோம்பேறித்தனத்தை    தான்  வளர்க்கும்.ரெண்டாவது பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து இருக்கும்  இந்த நேரத்தில் பணத்தின் அருமையை உணர்ந்தும்,எரிபொருள் சிக்கனத்தை நினைத்தும்,முடிந்தவரை நடக்க பழகுவோம். 

வியாழன், 16 செப்டம்பர், 2010

தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தீர்ப்பு!!!!

"இல்லத்தரசிகளின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது.வீடு வேலைகள் குழந்தைகளின் படிப்பு,கணவரின் ஆரோக்கியம்,என்று அவர்கள் பணத்துக்காக இந்த அன்பையும்,உழைப்பையும் கொடுக்கவில்லை.கொடையாக(gruduity) வழங்குகிறார்கள்.எனவே அவர்கள் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கான வாய்ப்பாக இல்லத்தரசிகளுக்கும்  இனி சம்பளம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம்   வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது .இல்லத்தரசிகளை வருவாய் இல்லாதவர் பட்டியலில் வைத்திருப்பது அதிர்ச்சிகரமானது.
2001 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இல்லத்தரசிகளை பிச்சை எடுப்பவர்கள்,விபச்சாரிகள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் சேர்த்துள்ளனர்.இது பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.வேலைக்குச் செல்லும் கணவனின் வருமானத்தில் பாதியை,வீட்டையும்,குழந்தைகளையும் கவனிக்கும் அவருடைய மனைவியின் பணிகளுக்கான சம்பளமாக மதிப்பிட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிலும்  கிராமப்புற பெண்கள் தண்ணீர் எடுப்பது,விறகு சேகரிப்பது,சாண  எரு  தயாரித்து சமையலுக்கு பயன்படுத்துவது,தேவையான காய்கறிகளை தோட்டத்தில் வளர்ப்பது என எக்கச்சக்க வேலைகள் செய்கின்றனர்.இதெல்லாம் பொருளாதார சேமிப்புதானே?
எனவே இல்லத்தரசிகளே "வேலைக்கு எல்லாம் போகல.வீட்டுல சும்மாதான் இருக்கேன்  "என்ற தாழ்வு மனப்பான்மை இனி வேண்டாம்.உங்கள் உழைப்புக்கு,அக்கறைக்கு,அன்புக்கு,தியாகத்துக்கு காலம் பல கடந்து மரியாதை கிடைத்து இருக்கிறது இந்த தீர்ப்பின் மூலம்!!!!!
 

பொதுமக்களுக்கு ஓர் யோசனை!!!!

இப்போதுள்ள சூழலில் எங்குப் பார்த்தாலும் வழிப்பறி  ,கொள்ளை,.இதற்கு நாம் தீர்வு காணமுடியாது.ஏன் என்றால் இல்லாதவன் இருப்பவனிடமிருந்து எடுத்துகொள்கிறான்.ஆனால் அவனுக்குத் தெரியாது நடுத்தரமக்களில் பெரும்பாலோர் கடனை,உடனை வாங்கி வசதியாக இருப்பதைபோன்று சீன்போட்டுகொண்டு இருக்கிறார்கள் என்று..எனவே  Mr.பொதுசனங்களே உங்கள் வீட்டிலுள்ள நகைகளையோ,பணத்தையோ திருடன் யூகிக்குமாறு பீரோவில்  வைக்காதீர்கள்.வேறு எங்காவது வீட்டிற்குள்ளேயே   வைத்தால்  கண்டு பிடித்து எடுப்பது சிரமம்.

வரதட்சணைச் சட்டத்தின் சில பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்!!!!

வரதட்சணைச்   சட்டத்தின் சில பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என  நாடாளுமன்றம் பரிந்துரைத்திருகிறது..இதில் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் நிறைய இருக்கிறது என்பது உண்மைதான்.சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவாகும் வழக்குகளில் 40 சதவீதம் உண்மையில்லை என்று தெரிகிறது.இது பெரும்பாலும் நடுத்தரக்குடும்பங்களில் மட்டுமே நடக்கிறது.ஆனால் எத்தனையோ ஏழைக்குடும்பங்களில்       வரதட்சணைக் கொடுமைகள் நடக்கத்தான் செய்கின்றன.இரண்டாவது பெரும்பாலான பெண்கள் ,கணவரையோ,அவரது குடும்பத்தினரையோ சிறைக்கு அனுப்பும் நோக்கத்துடன் வழக்கு தொடருவது இல்லை.தங்களுக்கும்,தங்கள் குழந்தைகளுக்கும்சட்ட ரீதியாக  கிடைக்க வேண்டிய சீர்போருள்கள்,நகைகள்,ஜீவனாம்சம் போன்றவற்றைத்தான் பெற விரும்புகிறார்கள்.எனவே இந்தச் சட்டம் இல்லையென்றால் பணிக்குப் போகாத பெண்களின் நிலை பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் கேள்விக்குரியதாகிவிடும்.
அதிலும் காவல்துறையினரால் குடும்ப வழக்குகள் புறக்கணிக்கபடுகின்றன   என்பதும் ஒரு கசப்பான உண்மை.என்னவாக இருந்தாலும் குடும்பத்தினரே உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்ள காவல்துறையினரால் நிர்ப்பந்திக்கப்  படுகின்றனர். தீர்த்து வைக்கவே முடியாத சில பிரச்சினைகளில் காவல்துறையினர் இப்படி மெத்தனமாக இருப்பதால்  தான் அது குடும்ப வன்முறையிலோ,கொலையிலோ போய் முடிகிறது.இப்போது பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினைகள் காரணமாகத்தான் நிகழ்கிறது.எனவே வரதட்சணைச் சட்டத்தில் திருத்தம் அவசியமற்றது.
எந்தச் சட்டமும்,குறிப்பாக தீண்டாமைகெதிரான சட்டம்,பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றவைக் கூடத்தான் தவறாக பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது.அதற்காக இவற்றை எல்லாம் நீக்கிவிட முடியுமா    என்ன?

பணத்தைக் கையாளும் முறை....

பொதுவாகவே பணத்தைச் சம்பாதிக்கச் சொல்லி  தரும் நம் சமூகம் ,அதைக் கையாளுவதுக் குறித்து தெளிவாகச் சொல்வது இல்லை.அப்பாவின் பணத்தை செலவழிப்பதில் இருக்கிற சுகமும்,தன பணத்தை செலவழிக்கிற சுதந்திரமும் வேறுவேறானவை.
முக்கியமாக இன்றைய மாணவச் சமுதாயத்தினருக்கு  வெளிநாட்டினரைப் போல படிக்கும் போதே பணி செய்யும் சூழல் அமைய வேண்டும்.பணத்துக்காக மட்டும் இன்றி, வாழ்க்கையைப் பற்றிய புரிதலுக்காகவும்,சமூகத்தின் யதார்த்தங்களை அணுகவும் சுயத்தை மேம்படுத்தவும் இது உதவும்.வெளிநாட்டினரின் எல்லா கலாசார முறையையும் பின்பற்றும் நமக்கு இதையும் நம் வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது.

தற்கொலை அந்த மணித்துளியின் முடிவல்ல...

2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயின்படி 14 வயதுக்குட்பட்ட 30௦ ஆண்குழந்தைகளும், 80 பெண்குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்..என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?
தற்கொலை என்பது , எங்கோ,யாருக்கோ நடக்கும் நிகழ்வு அல்ல.நம்மைச்சுற்றி இருக்கும் உயிர்கள் அப்படி முடிவெடுக்கலாம்.அல்லது முடிவெடுக்கத் தள்ளப்படலாம்.
எனவே பிள்ளைகளை பொக்கிஷமாக வளர்ப்பதை விட ...அவமானங்கள்,தோல்விகள்,பிரச்சினைகள் என்று எதையும் கடக்கும் மனப்பலத்துடன்   வளர்ப்பது நல்லது..இபோதுள்ள கலாச்சாரத்தின் படி பணம்,புகழ்,அழகு இவைதான் வெற்றி என்கிற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.அதை இன்றைய இளையதலைமுறையினரின் எண்ணத்தில்  இருந்து அகற்ற வேண்டியது பெற்றோர்களது பொறுப்பு  தான்.
நம்முடைய அன்பும் அரவணைப்பு மட்டும் கிடைத்தால் போதும்.அவர்கள் கேட்டதை எல்லாம் செய்வதுதான் அன்பு என்று எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கிகொடுத்தால் நாளைக்கு அவர்கள் ஒரு கஷ்டமான சூழலை சந்திக்கும் போது மனம் உடைந்து போவார்கள்.எனவே பிள்ளைகள் மனதில் நம்பிக்கையை வளருங்கள்.

புதன், 15 செப்டம்பர், 2010

வாழ்க்கைப்பற்றிய சரியான புரிதல்.....

நம்முடைய குழந்தைப்பருவம்,இளைய பருவம்,நடுத்தர பருவம் என எத்தனையோ பருவங்களை ரசித்து சந்தோஷமாக வாழும் நாம்,முதுமைப்பருவம் எட்டிப்பார்த்தால் மட்டும் நடுநடுங்கிப்போகிறோம்.ஒதுக்கிவிட்டு ஓடப்பார்க்கிறோம். இளமைப்பருவம் எப்படி இயற்கைத் தந்த வரமோ...அதுபோலத்தானே முதுமைப்பருவமும்?எனவே அதை இனிமையாக்குவது முதுமையைத் தொட்டவர்கள்,தொட இருக்கிறவர்கள் இருவரின் கைகளில் தான் இருக்கிறது!

நிம்மதியும் மகிழ்ச்சியுமான வாழ்க்கை.....

இன்று தினசரி பத்திரிகையை படித்தால் திருமணம் தாண்டிய உறவு காரணமாக கொலை,தற்கொலைகளின் லிஸ்ட் பெரிதாக உள்ளது.
ஒரு கணவனும் ,மனைவியும் முடிந்தவரை பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும்.ஆனால் அதையும் மீறி உணர்வு ரீதியான பிரச்சினைகளையும்,சவால்களையும் சமாளிக்க தெரியாமல்  போகும்போது ஒன்று அவர்கள், உடல் ரீதியிலும், மனரீதியிலும் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள் .இயல்புக்கு மாறாக சிடுசிடுப்பு, எரிச்சல்,அடுத்தவர் சந்தோஷத்தை பொறுக்காமல் போவது,இளம் வயதிலேயே டயபடிஸ்,பிரஷர்  போன்றவற்றை எல்லாம்  பெறுவது இதன் பாதிப்புகளே..
அந்த நேரத்தில் உறவை விட்டு வெளியே கேரக்டரை சந்திக்கும் போது அவர்கள் சேர்ந்து வாழ்வதில் என்ன  தவறு இருக்க முடியும்?
சொல்லப்போனால் முறையற்ற உறவுகளில் சிக்கி தடம் புரளாமல் இருக்க இந்தவகையான முறையான திருமணம் செய்வதில் தவறு இல்லை.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

நமக்குள்ளே இருக்கு குழந்தை உள்ளம்...

'அமைதியாக யோசித்துப்பாருங்கள்..நம் எல்லோர் மனதுக்குள்ளேயும் ஒரு குழந்தை நிச்சயமாக இருக்கும். ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்த குழந்தையை சிரிக்கவைக்கிறோம்?நொடிபொழுதும் ஓய்வில்லாமல் ஓடிகொண்டே இருக்கிறோம்.
பள்ளி,கல்லூரி நாட்களில் நாம் அனுபவித்த  தருணங்களை     மீண்டும்  வாழ்க்கையில் கொண்டு வர அடிக்கடி ஜாலி டூர் செல்லுங்கள்..நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்கிற நேரம் அது.
அதுவும் குடும்பங்களை  பொறுத்தவரை கணவனுக்கோ மனைவிக்கோ இல்லறத்தில் ஒரு சலிப்புத்தன்மை வரும்.ஓடி ஓடி உழைப்பதால் வரும் அலுப்பு.
எங்காவது பயணம் செய்து தங்க நேரிடும் போது,அந்த கணவனின் அன்பு அருகாமை,அதே போல மனைவியின் அன்பு,அக்கறையை கணவனும்  புரிந்து கொள்ள ஒரு நல்ல  வாய்ப்பு. அதுமட்டும் இன்றி அருகாமையில் இருக்கும் மற்ற ஊர்களுக்கு செல்லும் போது அந்த மக்களைப்பற்றியும்,அவர்கள் ஊர் பற்றியும் அறிய முடியும்.வேற்று மொழியினர் என்றால் அவர்களின் மீதுள்ள ஆர்வத்தால் அந்த மொழியையும் கற்றுக்கொள்ள ஆசை வரும்.எப்பொழுது  பார்த்தாலும் சீரியல் பார்த்துக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்காமல், அதே போல் கணவர்களும் பணம் சம்பாதிப்பதையே  குறிக்கோளாக கொள்ளாமல் உலகத்தின் இன்னொரு பக்கத்தினை அறிய முற்படுவோம்.அழகான இந்த உலகம் நமக்காக நிறைய ஆச்சரியங்களை வைத்துக்கொண்டு காத்து இருக்கிறது...