வியாழன், 28 அக்டோபர், 2010

பயணம் செய்ய விரும்பு !

இயற்கையின் பிரமாண்டத்தை வியக்கவும், மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், வீட்டின் நாலு சுவர்களுக்குள் பெறமுடியாத சில வாழ்க்கை தரிசனங்களைப் பெறவும் பயணங்கள் தேவை.
இன்றைக்கும் கூட ஆண்களைப்  போல் பெண்களால் தனியாகப் பயணம் செய்ய முடிவதில்லை. எத்தனையோ ஆண்கள், "போர் அடிக்குது", "ஸ்ட்ரெஸ் ஜாஸ்தியாயிடுச்சு" என்று ஒற்றைப் பையை எடுத்துக் கொண்டு டூர் கிளம்பி விடுகிறார்கள். டூர் வேண்டாம்...அட்லீஸ்ட் உறவினர் வீட்டுத் திருமணத்துக்காவது  பெண்களால் உற்சாகத்துடன் கிளம்ப முடியுமா?
இன்றைக்கும் கூட தனியே பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெறும் பத்து சதவீதம் தான் என்கிறது புள்ளி விவரம். பயணம் என்பது எல்லாக் காலங்களிலும் பெண்ணுக்கு பெரும் சுமையே. அவ்வையாரும், காரைக்கால் அம்மையாரும் தனிவழிப் பயணத்தின் ஆபத்துக்களுக்கு அஞ்சியே கிழதனத்தையும், பேய் உருவத்தையும் வரமாக வேண்டிப் பெற்றனர்.நமக்குத் தெரிந்து எந்த ஆண் பயணியும் கிழவனாகவோ...பேயாகவோ...வரம் கேட்டதில்லை.ஆணுக்கு பயணம் என்பது சிறகு.பெண்ணுக்கு அதுவே விலங்கு.
சிறிது காலத்திற்கு முன்னர் கூட ஒரு இருவது வயது பெண் தனியாக தெருமுனை கடைக்கோ...தோழிகள் வீட்டுக்கோ சென்றால், அவளின் பத்து வயது தம்பி துணைக்கு வருவான். மானசீக காரை சதா ஓடிக் கொண்டும், எதிரே இல்லாத கவாஸ்கருக்கு பந்து போட்டுக் கொண்டும் வரும் அந்தப் பயல், அவளுக்கு எப்படி பாதுகாப்பாக வருவான்?
ஆனால் இன்றைய இளம்பெண்கள் அதற்கெல்லாம் அஞ்சுவதே இல்லை.அவர்களின் தைரியம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பயணத்திற்கு ஏற்றார் போல வசதியாக உடை அணிவது,பழைய பஞ்சாங்கம் போல பெரிய ஹான்ட்பாக், கழுத்து நிறைய நகைகள் என்றெல்லாம் இல்லாமல் ஆண்களைப் போல சிறிய purse ,குட்டைதலைமுடி,ஜீன்ஸ், முரட்டுச் சட்டை  போன்ற அவர்களின் தோற்றம் 'எனக்கு தனிவழிப் பயணம் ரொம்பவே பழக்கம் ' என்பதை சொல்லாமல் சொல்கிறது.
அவர்களது வேலை நிமித்தமாக அடிக்கடி தனியே பெண்கள் பயணிக்க வேண்டி யுர்கிறது.தகவல் தொடர்புக்கு செல்போன், பயனதுகேற்ற உடைகள், திருட்டு பயம் தவிர்க்க டெபிட் கார்டு என்று அவர்களின் பயணமும், பாதையும் சுலபமாகியுள்ளது. இந்தப் பாதையில் இவர்கள் யாவருக்கும் முன்னோடியாக கல்லிலும், முள்ளிலும் ரத்தம் சொட்டச் சொட்ட முதலில் நடந்த பெண் பயணி அவ்வையாராகதான் இருக்க வேண்டும்...
 'என் மூட்டையை   எடுத்துக் கொண்டேன்
பொருட்களைக் கட்டிக் கொண்டேன்
மரம் வெட்டும் தச்சனிடம் தொழில்
கற்ற அவனது பிள்ளை
கோடரியுடன் காட்டுக்குச் செல்வது போல
நான் செல்கிறேன்
நான் எந்தத் திசை சென்றாலும்
அந்தத் திசையில்
எனக்கு சோறு கிடைக்கும்!'
                                     - அவ்வையார். புறநானூறு.

திங்கள், 25 அக்டோபர், 2010

கலாச்சாரத்தை உரசிப் பார்க்கும் 'LIVING TOGETHER ' !!!!!!!!!

'திருமணம்...குடும்பம்...என்பதெல்லாம் சிதைந்து கொண்டே இருக்கிறது' என்றொரு பேச்சு தொடர்ந்து ஒலித்தபடியேதான் இருக்கிறது. இதைப் பற்றி யோசிக்கும் போது, எங்கேயோ...எப்போதோ...கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது...
நீளமான கூந்தல் அழகில் எப்போதுமே லயித்திருப்பவள் அவள். அதுதான் அவளுக்கு பெரிய சொத்து. ஆனால், அதைப் பராமரிக்க ஒழுங்கான சீப்பு கூட அவளிடம் இல்லை. கணவனிடம் இருக்கும் மிகப் பெரிய சொத்தே அவனது கைக்கடிகாரம் தான். ஆனால் அதற்கு சரியான ஸ்ட்ராப் இல்லாததால்...அதைக் கையில் வைத்துதான் அழகு பார்க்க முடிகிறது.
ஒரு நாள்...அழகான ஸ்ட்ராப்போடு மனைவி வந்து நிற்க...விலை உயர்ந்த சீப்பில் எதிரில் வந்து நின்றான் கணவன். ஆனால், சீவுவதற்குதான்   அவளிடம் நீளமான முடியில்லை. அதை வெட்டி விற்றுத்தான் ஸ்ட்ராப் வாங்கி வந்திருந்தாள் மனைவி. அதே நேரம்... அதைக் கட்டுவதற்கு இவனிடம் கடிகாரமும் இல்லை. அதை விற்றுத்தான் சீப்பையே வாங்கி வந்திருந்தான்.
நெஞ்சை நெகிழ வைக்கும் 'டச்சிங்கான' கதையாக இருக்கிறதல்லவா...?
இத்தகைய அன்னியோன்யம் தானே... வாழ்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தப் புரிதல் இல்லாதபோது...பிரச்சினைகள் எட்டிப் பார்க்கத்தான் செய்யும்!  அதற்காக, 'சிஸ்டமே தவறு'  என்று ஒரேயடியாக போட்டு உடைத்து விட முடிமா...?
நன்கு யோசித்துப் பார்ப்போம்...
'ஒருவனுக்கு ஒருத்தி  என்று  கூடி வாழ வேண்டும்'  என்று மனித இனம் தோன்றிய போதே யாரவது சட்டம் போட்டு வைத்தார்களா...இல்லையே...!
நாகரிகம் வளர வளர நாமாக பார்த்து முடிவு செய்ததுதானே திருமணம்,  குடும்பம், குழந்தை என்பதெல்லாம்.  ஆனால், இது வாழ்க்கைக்கு மிகவும் வசதியானதாக இருக்கிறது என்பதால்...ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாமும் கடைப் பிடித்து வருகிறோம்.

கோடு, வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி...கொள்ளும்போது கொள்ளு...தாண்டிச் செல்லும்போது செல்லடி...' -
இப்படி ஒரு பாடலில் கண்ணதாசன் எழுதி இருப்பார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் நாமே போட்டுக் கொண்ட கோடுகள் தான். ஆனால் ஒரே நாளில் போட்டுக் கொண்டதில்லை...காலம் காலமாக அனுபவித்துப் பார்த்து...'இதுதான் சரி' என்று போட்டு வைத்த கோடுகள்!
'அடுத்தவன் சொன்னா கசக்கும்...கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்'
 எனவே எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

 இதைக்குறித்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில் "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்கிறோம். அப்படி வாழ்வியலை கற்றுக்கொள்ளும் பள்ளியாகவும், கற்றுத்தரும் ஆசிரியராகவும் இருப்பது குடும்பம் என்னும் வலுவான அமைப்புதான்,அந்த அமைப்பு இருவர் ஒப்புக் கொண்டு உறவுகளின் துணையோடு திருமணம் செய்து கொள்கிற போதுதான் உருவாகும், அதுதான் தழைக்கும்.ஆனால், 'எங்கள் இருவருக்கும் சில காரணங்களால் சேர்ந்து வாழும் கலாசாரம் பிடித்து இருக்கிறது: அதனால் சேர்ந்து வாழ்கிறோம்' என்கிற வாழ்க்கை முறையில் என்ன நிம்மதி கிடைத்து விடும்? 'என்றைகாவது ஒரு நாள் பிரிந்து விடப் போகிறவர்கள் தானே நாம்..?என்கிற உறவில் ஆழமான காதல், அன்பு வராது" என்கிறார். 
இரண்டாவது இந்த உறவில் வளரும் குழந்தைகள் அனாதையாக்கப்படும்: அல்லது தனித்து வாழும் சிங்கிள் பேரென்ட் குழந்தைகளாக வளரும்.அப்படி வளரும் குழந்தைகளின்  மனநிலையும், சமூக வளர்ச்சியும் கவலைக்குரியதாக மாறும், என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

நன்மை என்று பார்க்கும் போது, இந்த வாழ்க்கை முறைப் பற்றி சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ் சொல்லுகிறார், "இந்தியாவில் குடும்பம் என்கிற அமைப்பு இப்போது மிகவும் இறுக்கமானதாக இருக்கிறதே ஒழிய, இணக்கமானதாக இல்லை'என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தினம், தினம் பதிவாகும் விவாகரத்து, குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை அதற்கு சான்று.இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷமில்லாமல், சடங்குக்காக சேர்ந்து வாழும் திருமண வாழ்க்கைக்கு மாற்றாக, மாறி வரும் சமூகச் சூழலில் வயது வந்த ஆணும், பெண்ணும், 'நாம் சேர்ந்து வாழலாம்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாழ்வது குற்றம் கிடையாது.இது ஆரோக்கியமானதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்" என்கிறார் யதார்த்தமாக!

living  together  வாழ்க்கையை சட்டம் எப்படி பார்க்கிறது என்றால்,"இதற்கு சட்ட ரீதியாக எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால், இப்படி சேர்ந்து வாழும் போது, பெண்கள் பாதிக்கப்படும் சமயத்தில், அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு நிச்சயமாக உண்டு. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்   நியாயம் கேட்கலாம்.
மற்றபடி, ஒருவர் பிரிந்து செல்லும்  பட்சத்தில் குழந்தையை முன்னிறுத்தி ஆண் மீது உரிமை கோர இயலுமா, குழந்தைகளின் சொத்துரிமை எப்படி, போன்ற விஷயங்களுக்கெல்லாம் சட்ட ரீதியான தீர்வுகள் ஏதும் இதுவரை இல்லை. ஒரு வேளை   இந்த 'living together ' விஷயம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் போது...அதற்கான சட்டங்களும் வரலாம் "என்று உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்களில் ஒருவரான அஜிதா கூறுகிறார்.

சேர்ந்து இருப்பதற்கும், சேர்ந்து வாழ்வதற்கும் அர்த்தங்கள் வேறு! காலம்தான் அதைப் புரிய வைக்க வேண்டும்!

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

வெட்கம்!!!!!

'ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனமிங்கு அலைபாயுதே'
-பாட்டைக் கேட்கும் போதே நமக்கு அறிமுகமான எதாவது பெண்ணின் வெட்க முகம் நினைவில் வந்து விலகும். ஆம்...வெட்கத்தைப் பெண்களுடன் ஓட்டிப் பிறந்த குணமாகத்தான்  சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைய சினிமா வரை சித்தரித்துள்ளனர்.
'யானோக்குங் காலை   நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்'
- இது...'நான் உன்னைப் பார்க்க, நீ மண்ணைப்  பார்க்கிறாய். நான் விண்ணைப் பார்க்க, நீ என்னைப் பார்க்கிறாய்' என நாணம் சுமக்கும் பெண்ணைப் பற்றி வள்ளுவரின் பார்வை.
அன்னப் பட்சி தூது போன காலத்தில் இதெல்லாம் சரிதான். ஆனால் இந்தக் காலத்து lap -top பெண்களுக்கு இந்த வெட்கம் எந்த அளவுக்கு சூட் ஆகும்?
தன துணையான ஒரு ஆணிடம் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வெட்கம்  இயல்பானதுதான். ஆனால், பொது இடத்தில் பேச வெட்கம், புது ஆட்களுடன் பழக வெட்கம், என அந்த வெட்கம் மொத்த சமூகத்திடமும் ஏற்பட்டால், அது ஆரோக்கியமானது அல்ல. உண்மையைச் சொல்வதென்றால் அந்த வெட்கம், உங்களுக்குள் தேவை இல்லாத தாழ்வு மனப்பான்மையைத் தான் ஏற்படுத்தும்.
கதைக்கும் கவிதைக்கும் வெட்கம் அழகான கருப்பொருளாக இருக்கலாம். ஆனால், நிஜத்தில் உங்கள் வெட்கத்தைக் கொண்டாட இன்றைய சமூகத்துக்கு நேரமில்லை.நான்கு பேர் எதிரே,  'வணக்கம், ஐ   யாம் ஆர்த்தி'  என்று கம்பீரமாக எழுந்து வரும் பெண்ணுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், கடைசி பெஞ்சில் பதுங்கி உட்காரும் மாணவிக்கு கிடைப்பதில்லை. அளவுக்கு மீறி வெட்கம் காட்டும் பெண்களை இன்றைய இளைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ஆக...' ஹூம்...நான் பேசமாட்டேன்' என்று கால் கட்டை விரலில் கோலம் போடும் பெண்கள் revised  சிலபஸில்  இல்லை!
   'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை '  தான் பாரதி சொன்னதும்!"

வியாழன், 21 அக்டோபர், 2010

புதையாது காதல்!

இதயம் நுழைந்து
என்னைத் திருடும் வரை
துணிவோடுதானே இருந்தாய்..?
போகப் போக
பொருளாதார வீழ்ச்சி எனும்
புதைகுழியில் நீ வீழ்ந்த போது
நம் காதலையும் சேர்த்து
ஏன் புதைத்தாய்?
ஒவ்வொரு முறையும்
நான் மாறாத காதலெனும்
கயிறு கொண்டு
உன்னைத்
தூக்கும் போதெல்லாம்...
அவநம்பிக்கைச்  சகதியில்
நீயாகவே விழுகிறாய்!
விரக்தியும் சலிப்புமாய்
குழிக்குள் நீயும்...
மீட்டுவிடும் உறுதியோடு
வெளிப்புறத்தில் நானுமென
தொடர்கிறது
ஒரு போராட்டம்!    -----சிவாநிகா.

டைரக்டர்கள் கவனத்துக்கு!!

(வித்தியாசமான மூன்று கதைகள்..இதில் எதை வேணாலும் நீங்க உல்டா செய்து கொள்ளலாம். காப்பி,டீ,   ரைட்ஸ்   எல்லாம் தேவை இல்லை)
முதல் கதை..
பூமிக்கும்,சூரியனுக்கும் லவ்வு .. ..ஆனா அது ரெண்டும் ஒண்ணா சேர்ந்தா பூமியில இருக்கறவங்க எல்லாம் கருகிடுவாங்க.அதனால பூமியில இருக்கறவங்க இந்த காதலை எதிர்க்கறாங்க.  தடைகளைத் தாண்டி பூமியும் சூரியனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
க்ராபிக்ஸுக்கும், ஸ்பெஷல் effects  க்கும் ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கு.  satellite லேயே காமெராவ பிக்ஸ் பண்ணிப்  பாதிப் படத்தை முடிச்சுரலாம்.காதல் வேகத்துல பூமி சூரியனை சுத்தி சுத்தி நடனம் ஆடுற மாறி பாட்டு போட்டு கலக்கிடலாம்.
 
இன்னொரு கதை...
"எத்தனை நாளைக்கு தான் ஹீரோ ஹீரோயின் ஒன்னு சேர்றதோட  படத்தை முடிப்பாங்க? இந்தக் கதையில வழக்கம் போல வில்லனை அடிச்சு வீழ்த்தி அவகிட்ட இருந்து ஹீரோயினைக் காப்பாத்தி அவளை கல்யாணம் பண்ணிகிறார் ஹீரோ.அதுக்கப்புறம் தான் கதையே சூடு பிடிக்குது.தினம், தினம் அவனோட பஞ்ச் டையலாக்கைக்  கேட்டுகிட்டு, அவனோட ஒழுங்குபிள்ளைத் தனத்தை மெச்சிகிட்டு, அவனோட இருந்து அவளுக்கு போரடிக்குது. ஒரு ஹீரோவோட வாழ்க்கை நடத்தறது எவ்வளவு கஷ்டம் னு அவ அப்போதான் புரிஞ்சுக்கறா.  "இவன்  torture
க்கு
அவனே மேல்" னு அவ ஹீரோவை divorce பண்ணிட்டு வில்லனைக் கல்யாணம் பண்ணிக்கறா.  மூணு மனசுக்குள்ள நடக்குற உணர்ச்சி போராட்டத்தை பிழிஞ்சு தரனும். (எப்படி divorce  வாங்கறதுன்னு தெரியாம குடும்பம் நடத்திட்டு இருக்கற தாய்குலங்களை எல்லாம் கவர்ந்து இழுத்திடும் இந்த சப்ஜெக்ட்.)!!!!!!
 
இன்னொரு கதை....
லவ் ஸ்டோரி ல ஏதாவது சமுதாயப் புரட்சி பண்ணலைனா எப்படி? பெருமாள் கோவில் வாசல்ல வரிசையா உட்கார்ந்து பிச்சை எடுப்பாங்களே...அதுல ரெண்டு பேர்தான் நம்ம  ஹீரோ,ஹீரோயின்... முக்காடு போட்டுக்கிட்டு பத்தாவது ரவுண்டு புளி சாதம் வாங்கும் போது ரெண்டு பேர் கையும் உரசிக்க, காதல் பத்திக்குது.ஆனா கூட பிச்சை எடுக்கறவங்க இதை கடுமையா எதிர்க்கறாங்க. 'நாங்க இந்த நிலைமைக்கு வந்ததே காதலிச்சனாலதான், அந்த தப்பை நீங்க பண்ணிடாதீங்க' னு அட்வைஸ் பண்றாங்க.அவங்க எதிர்ப்பை எல்லாம் மீறி அவங்க தெய்வீக காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதுதான்    கதை.
'இது புளிசாத காதல் ஆனா, புளிக்காத காதல்' னு ஒரு டூயட் சாங்கை  மூணு தடவை ரிபீட்  பண்ணி, அதை  யூத்களின்  ரிங்டோனா ஆக்கணும்.

புதன், 20 அக்டோபர், 2010

அவசர வாழ்க்கை..அனுபவிக்க இயலாத வாழ்க்கை!!!!!

இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று, அவசரம்!
வீடு, பணியிடம், பேருந்து, பள்ளி, கோயில், வங்கி, மருத்துவமனை, தியேட்டர்   , என எங்கும் அவசரம் பொங்கி வழிகிறது.  சிறியவர்கள், பெரியவர்கள் என பேதமில்லாமல் இந்த நோய்க்கு நம்மை ஒப்புக்கொடுத்து இருக்கிறோம்.
 
எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒரு போதும் நம்மை கேட்டுக் கொண்டதே இல்லை. அவசரம் வைரஸ் கிருமிகளை விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிடமே கைகால்கள்  தாமே உதறத் துவங்குகின்றன. முகம் சிவந்து விடுகிறது.உடல் நடுங்கத் துவங்குகிறது.கோபம், ஆத்திரம், கவலை, என்று உணர்ச்சிகளின் தடுமாற்றத்திற்கு மூல காரணமாக இருப்பது அவசரம் தான்.
 
சாலையோர சப்-வேயின் படிக்கட்டில் உட்கார்ந்து கையேந்தும் பிச்சைக்காரன் கூட இதை விட அமைதியாகவும் அவசரமின்றியும் தன் நாட்களை கழிக்கிறான். படுக்க இடமில்லாமல் சாலையில் உறங்குபவர்கள் கூட மாலை நேரங்களை ரேடியோ கேட்டுக் கொண்டும், பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு, யாவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
 
வேலை, பணம், ஆசைகள் என்று மாய மானைத் துரத்தித்திரியும் மத்திய தர வர்க்கம் எதையும் அடைய முடியாமலும் திரிசங்கு சொர்க்கம் போல மிதக்கிறது.அவசரம் அவர்களின் வயதின் மேன்மையை அழித்து விடுகிறது.தோற்றத்தில் மட்டுமின்றி, சிந்தனையிலும், செயல்பாட்டிலும் சலிப்பு தொற்றிக் கொண்டு விடுகிறது.
யோசிக்கையில் தோன்றுகிறது...நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். என்னதான் பணிசார்ந்த அவசரம் தவிர்க்க முடியாமல் போனாலும், எல்லா நேரங்களிலும் ஏன் இப்படி படபடப்பாகவும், நிம்மதியின்றியும் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை!
 
வண்ணத்துப் பூச்சி ஒரு பூவிலிருந்து தேன் எடுப்பதற்காக எங்கெங்கோ சுற்றி அலைகிறது.ஆனால் தேன் உள்ள பூவைக் கண்டு விட்டாலோ அதைச் சுற்றி வந்து உணர்கொம்புகளால் தேனை உறிஞ்சி அப்படியே கிறங்கிக் கிடக்கிறது.ஒரு துளி தேன் என்றாலும், அதன் சுவையை சுவையை ருசிக்கும் வண்ணத்துப் பூச்சியின் லயிப்பு நமக்கு ஏன் வருவதில்லை?

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

எது அழகு?


"நான் அழகாக இருக்கிறேனா?" என்பது வெறும் கேள்வியாக இல்லாமல் ஓர் ஆதங்கமாகவே  நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது.வேறு எந்தச் செயலையும் விட ,ஆணும் பெண்ணும் தான் அழகாக இருப்பதாக காட்டிகொள்வதில் தான் அதிகம் ஈடுபாடு கொள்கிறார்கள்.
உண்மையில் நாம் அழகாக இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும் போது  ,நமக்கு இருக்கும் ஒரே துணை கண்ணாடி தான்.கண்ணாடியில் தெரியும் நம் உருவத்துடன் பேசத்துவங்குகிறோம்.கண் ஏன் இப்படி இருக்கிறது?உதடு ஏன் உலர்ந்திருக்கிறது?கேசம் ஏன் கலைந்து கிடக்கிறது என உடலை உற்று நோக்கத் துவங்குகிறோம்.
அழகு கண்ணாடியில் இல்லை; காண்பவரின் கண்களில் தான் இருக்கிறது என்று புரியத் துவங்கும் பொது, அழகின் மீதான அக்கறையைக் கடந்து வயதுக்குள் வந்து விடுகிறோம்.அப்போது மனிதர்களை விடவும் இயற்கை மிக அற்புதமானது என்று நமக்கு புரிகிறது.
உண்மையில் நாம் ஒவ்வொருவரும்   தனித்துவமான அழகுடன் தான் இருக்கிறோம்.இருக்கிறோம்.அதை நாம் உணர்வதில்லை.அழகைப் பற்றிய நம் மதிப்பீடுகளில் பெரும்பான்மை அர்த்தமற்றவை.அன்பும், நட்பும், அடுத்தவர் மீதான அக்கறையும், எதையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய பக்குவமும், உள்ள யாவரும் அழகானவர்களே! சில தருணங்களில் இயல்பாக வெளிப்படும் அழகுக்கு நிகர் எதுவுமே இல்லை. அதற்கு கீழ்க்கண்ட பாடலே உதாரணம்.
ஆடும்பொழுது மயில் அழகு
ஓடும்பொழுது மான் அழகு
தாவும் பொழுது முயல் அழகு
கூவும் பொழுது குயில் அழகு
பாயும் பொழுது புலி அழகு
மேயும் பொழுது பசு அழகு
நடக்கும் பொழுது கால் அழகு
கடக்கும் பொழுது நதி அழகு
அணியும் பொழுது நகை அழகு
தணியும் பொழுது சினம் அழகு
அரைக்கும் பொழுது சந்தனம் அழகு
உரைக்கும் பொழுது தங்கம் அழகு
காணும் பொழுது தாய்மை அழகு
பேணும் பொழுது ஒழுக்கம் அழகு
சிரிக்கும் பொழுது குழந்தை அழகு
தரிக்கும் பொழுது முடி அழகு
புலவர் இராச  ரத்தினம்.
மழை நாள் ஒன்றில் ஒரு குடைக்குள்ளாக மூன்று பேர் ஒண்டிக்கொண்டு நனையாமல் போய்க்கொண்டு இருந்தார்கள். மழையின் ஈரம் படிந்த முகங்கள், மெல்லிய புன்னகை, நனைந்து கலைந்த கேசம், காற்றையும் சாரலையும் பார்த்த  அவர்களது மகிழ்ச்சி, என அழகு  அழியாத சித்திரமாக அவர்களுக்குள் இருந்தது.
இது போல எத்தனையோ நிமிடங்களில் மனிதர்கள் சொல்லமுடியாத பேரழகுடன் இருப்பதைக் காணலாம்.ஒரியப் பழங்குடி மக்களிடம் ஒரு கதை இருக்கிறது. ஒரு காலத்தில் நிறங்கள் தங்களுக்குள் எது சிறந்தது என சண்டையிட்டுக் கொண்டனவாம்.அப்போது வானில் திடீரென பலத்த சத்தத்துடன் மழை பெய்யத் துவங்கியதாம்.நிறங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டு நெருங்கிக் கொண்டன.உடனே ஏழு நிறத்தில் ஒரு வானவில் உண்டானதும், நிறங்கள் அதைக் கண்டு ஆச்சரியம் கொண்டனவாம்.
அப்போது வானிலிருந்து ஒரு குரல் சொன்னது....."ஒவ்வொரு நிறமும் அதனதன் வழியில் தனித்துவமானதுதான்.ஆனால் அத்தனையும் விட அழகானது இப்படி ஒன்றாக இருக்கும் வானவில் நிறம் தான் "..என்றது.அப்போது தான் நிறங்களுக்கு நிஜம் புரிந்தது. மனங்களுக்கும்  புரியும் என்பதில் சந்தேகமில்லைதானே?

"உங்களை எல்லாம் யார் கல்யாணம் பண்ணிக்க சொன்னது?"

கேள்விகளில் ஆண் பெண் என்ற பேதமிருக்கிறதா? இருக்கிறது என்றே தோன்றுகிறது.ஆண்களுக்கு சில கேள்விகள் தோன்றுவதே  இல்லை.அதில் ஒன்று இந்த கேள்வி.பெரும்பாலும் பின்னிரவில்  வீடு திரும்பும் போது, பெண்களிடம் இந்தக் கேள்வி எழுகிறது.எந்தக் கணவனும் இதற்கான பதிலைச் சொல்லியதில்லை. யாவருக்கும் பொதுவான ஒரே பதில், மௌனம் மட்டுமே!
வீட்டைக் கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எல்லா ஆண்களுக்கும் பொதுவானது.அதில் பெரும்பகுதி உண்மை இருக்கவும் செய்கிறது.எங்கோ நடக்கும் கிரிக்கெட் போட்டி,இராக் யுத்தம் வரை அக்கறையாக கவனிக்கும் ஆண்களுக்கு தன் வீட்டில் நடப்பதை கவனிப்பதற்கு மட்டும் விருப்பமில்லாமல் போகிறது?
காரணம் வீடு என்பது அவனைப் பொறுத்த மட்டில் தன் சுதந்திரத்துக்கு தடை விதிக்க கூடியது.அது, பிரச்சினைகளின் விளை நிலம்.
 
கி.மு - கி.பி. என்பது போல பெண்களுக்கு தி.மு - தி.பி என வாழ்வு இரண்டாக பிரிக்கப் பட்டு இருக்கிறது.திருமணத்துக்கு முந்தைய பெண்ணின் வாழ்வும்,திருமணத்துக்கு பிந்தைய பெண்ணின் வாழ்வும் மிகுந்த வேறுபாடு கொண்டது. வீட்டிலிருந்து பெண் வெளியேறிப் போனாலும் பெண்ணிடமிருந்து வீடு எளிதில் வெளியேறுவதில்லை.
திருமண மண்டபங்களில் உதிர்ந்து கிடக்கும் பூவிதழ்களுடன் பெண்ணின்  கனவுகளும் உதிர்ந்து விடுகின்றன.
திருமண குறித்த கனவுகள் ஆணுக்கு ஒன்றாகவும்,பெண்ணுக்கு வேறு ஒன்றாகவும் இருக்கிறது.அது கலையத் துவங்கும் பொது ஆண் ஆத்திரம் கொள்பவனாகவும்,பெண் அடிவாங்குபவளாகவுமே இருக்கிறார்கள்.பெண்கள் தங்களுக்கு கிடைத்த வாழ்வை சகித்துக் கொள்வதும்,இருப்பதில் திருப்தி அடைவதும்,வேதனையை மனதிற்குள் புதைத்து விடுவதுமே,பல குடும்பங்கள் உடைந்து போகாமல் இருக்கக் காரணமாக இருக்கிறது.
மாலை நேரங்களில் மின்சார ரயிலில் பயணம் செய்து வீடு திரும்புபவர்களைக் கவனித்து இருக்கிறேன்.ஒரே ரயிலில் தான் ஆணும்,பெண்ணும் பயணம் செய்கிறார்கள்.தன் வீட்டின் அருகில் உள்ள  ரயில் நிலையம் வந்ததும் ஒன்றாகத்தான் இறங்குகிறார்கள்.ஆனால்  ரயில் நிலையத்தை விட்டு வெளியே  வந்த ஆண்கள் ஆங்காங்கே நின்று tea  குடித்தபடியோ, சினிமா விளம்பரங்களை வேடிக்கை பார்த்தபடியோ,நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியோ நிற்கிறார்கள்.
பெண்களோ ரயில் நிலையத்தில் வெளியேறும் வாசலில் உள்ள காய்கறிக்கடைகளில் நின்று பேரம் பேசிக் காய்கறிகள் வாங்கிக் கொண்டு இருப்பார்கள்.பல்லி தன் நாக்கை நீட்டி பூச்சியை கவ்வி இழுத்துக் கொள்வது போல, வீட்டை நெருங்குவதற்கு முன்பாக தன் நாக்கால் பெண்ணை கவ்வி இழுத்துக் கொள்கிறது வீடு.
 
இன்று அதிருப்திகளும்,அக்கறை இன்மையும் நம் வீடுகளை நீக்கமறப் பற்றி இருக்கின்றன. அநேகப் பெண்களின் மனக்குறைகளும்,ஆதங்கங்களும் அகற்றப் படுவதில்லை.எனவே தான் மனப்பாரத்தை இறக்க வேண்டி,ஒன்று கோவில் குளத்தை நாடிப்  போய் ஏமாறுகிறார்கள்.இல்லையேல் தவறான உறவுகளில் தடம் புரண்டு போகிறார்கள்.
வேலைச் சுமை, நகர நெருக்கடி,பொருளாதார நெருக்கடி என ஆயிரம் காரணங்கள் சொன்னபோதும்,ஒரே வீட்டில் ஆண்களும்,பெண்களும் வேறு வேறு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.சாப்பாட்டைப் போலவே பாலுறவும் தவிர்க்க முடியாத நிகழ்வாக முடிந்து போகிறதே அன்றி, அதில் ஆணோ,பெண்ணோ அக இன்பம் கொள்வதே இல்லை.
 
காக்கைக் கூட்டைப் பார்த்து இருக்கிறீர்களா? அது தன் கூட்டில் பகல் வேளைகளில் இருப்பதில்லை.அது பறந்து, திரிந்து  கிடைத்ததை சாப்பிட்டு,எப்போது வீடு திரும்புகிறது? எப்போது உறங்குகிறது என்று தெரியாது.அது தன் கூட்டை முட்களால்தான் கட்டுகிறது.ஆண்களுக்கு வீடு காக்கைக் கூடுதானா?

வியாழன், 14 அக்டோபர், 2010

"எனக்குனு யார் இருக்கா?"

வேறு எப்போதும் விட நோயுறும் போதுதான் இந்த மாதிரி கேள்விகள் மனதில் அதிகம் பிறக்கின்றன.வீடு கற்றுத்தர மறந்ததை மருத்துவமனை  கற்றுத்துருகிறது.புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்ததைப் போல நமக்கு நோயுறும் போதுதான் யார் நமக்கு நெருக்கமானவர்கள்,யார் நம்மை  பயன்படுத்தி கொண்டவர்கள் யார் என்பது தெரிகிறது.ஒரு சைக்கிள் க்கு      தரும் முக்கியத்துவத்தைக் கூட உடலுக்கு தருவதில்லை.இயல்பாக இருக்கும் போது உடலின் அற்புதம் நமக்கு புரிவதே இல்லை.10 வயதில் காய்ச்சல் காண்பதற்கும்,30 ௦ வயதில் காய்ச்சலில் படுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.10 ௦ வயதில் காய்ச்சல் வந்தால் எல்லாருக்கும் போல எனக்கும் வந்து இருக்கிறது என்று தோன்றும்.அதே 30  வயதிக்கு மேல் வந்தால் எனக்கு மட்டும் எப்படி காய்ச்சல் வந்தது?ஒரு வேளை  சரியாகாமல் போனால் என்ன செய்வது?" போன்ற கேள்விகள் எழும்.உடனே நம் மனதில் தோன்றும் முதல் கேள்வி, "எனக்குனு யார் இருக்கா?" என்பதுதான்.
நோயாளியின் அழுகை பல சந்தர்ப்பங்களில் வலியால் மட்டும் ஏற்படுவது அல்ல. மற்ற நேரங்களை விட சக மனிதனின் அன்பும் நெருக்கமும் மிகத் தேவையாக உள்ள தருணம் அதுதான்!
 
அதேபோல நோயுறும் போது ஆணுக்குக் கிடைக்கும் அன்பும் அக்கறையும் பெண்ணுக்கு கிடைப்பதில்லை.பெண் நோயுறும் குடும்பங்களில் அது தேவையற்ற பிரச்சினை என்றே தோன்றுகிறது.மனைவியோ,தாயோ   நோயுற்ற நேரங்களில் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் ஆண்கள் மிக சொற்பமே...
 
ஆணோ, பெண்ணோ, நாம் தேடித்,தேடி வைக்க வேண்டியது பணத்தையல்ல ....மனித உறவுகளையே!

புதன், 13 அக்டோபர், 2010

ரசித்தல்...

ரசித்தல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதி.ஆனால் நாமோ ரசித்தல் என்பதை கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கிறோம்.நம்முடைய ரசனைகள் எல்லாம் இயற்கைக்காட்சிகள்,மீன்தொட்டிக்குள் நீந்தும் வண்ணமீன்கள்,வேலைப்பாடுகளுடன் மாமனார் வீட்டில் வாங்கிக்கொடுத்த தேக்கு மரக்கட்டில்,உங்கள் காரின் பின் கண்ணாடியில் எழுதப்பட்ட 'catch me if u can' வாசகம்,உலக சினிமா DVD collections ,கிரிக்கெட்,என ஏற்பாட்டு  ரசனைகளாகவே இருக்கும்.
ரசிப்பதற்கு தகுதியான விஷயங்கள்,அதற்கான நேரம் என்று தனியே ஒரு பட்டியலோடு வாழ்ந்தால் நடை முறை வாழ்க்கையே ஒரு பெரிய வேலையைக் செய்வது போலத்தான் இருக்கும்.

அதிகாலையில் சிலர் வாக்கிங் கிளம்புமுன் காதில் வாக்மன் பொருத்தி இருப்பார்கள்.நடக்கிற களைப்பு தெரியாமல் இருக்கவும்,சுகமான பாடல்களை கேட்பதுமாக நேரத்தை செலவிடுவது நல்ல திட்டம்தான்.
ஆனால் காலையில் எழுந்து நடப்பது என்பதே சுகமானதுதானே? அப்புறம் என்ன காதில் வாக்மான்? களைப்பு தெரியாமல் இருக்கவா?
செய்கிற வேலையோடு இன்னபிற விஷயங்கள் ரசிப்புக்குரியன  அல்ல என்ற தீர்மானம்தான் காதில் வாக்மானாக தொங்குகிறது...
பகலில் நாம் கேட்டறியா பறவைகளின் பாடல்கள்,'goodmornig சார்!' நண்பர்களின் பாசப் புன்னகை,தந்தையைப் போலவே அதே  டி   ஷர்ட் ஐ போட்டுகொண்டு தந்தையின் ஸ்டைலில் வாக்கிங் போக முயற்சிக்கிற குட்டிப்பையனின் முயற்சி,மரங்களில் சரம் சரமாக பூத்து இருக்கும் அதிகாலைப்   பூக்கள்,புதிய சுவரொட்டிகள்,..இப்படி ரசித்து அனுபவிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் கிடைக்கும் போது,தேமே என்று மூச்சிரைக்க வாகிங் போவதால் மட்டும் என்ன பயன்?
இயற்கையை ரசிப்பதற்காக இரண்டு நாள் விடுமுறையை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கோ,கோடைகானலுக்கோ போவதுதான் நம்மில் பலரது ரசனையாக இருக்கிறது."நடைமுறை வாழ்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும்.பிறகு தனியாக ரசிக்க வேண்டும்!' - இதுதான் நம்மில் பெரும்பாலானோரின் திட்டம்.அதாவது இரண்டுமே வேலையாக இருக்கவேண்டும்.
அப்படி இல்லாமல் ரசிப்பதற்கு தகுதியான விஷயங்கள் என்று எதையும் பார்க்காமல் வாழ்க்கையை போகிற போக்கில் ரசிப்போமாக!

செவ்வாய், 12 அக்டோபர், 2010

சவால்கள் தேவை!!!!

ஜப்பானில் மீன் உணவு மிகப் பிரசித்தம்.அதனால் மீன்சந்தை நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்தது.ஒரு சமயம்,ஜப்பானை ஒட்டிய கடல் பகுதியில் மீன்வளம் குறைய ஆரம்பித்தது.மீனவர்களுக்கோ ஒரே கவலை! சரி, மோட்டார் படகுகளில் வெகுதூரம் போய் மீன்களை பிடித்து வரலாம் என்று போனார்கள்.அப்பாடா!  நிறைய மீன்கள் கிடைத்தன. ஆனால் அவற்றை கொண்டு வந்து விற்பதற்குள் மீன்கள் வாடிவிடவே மீன்கள் தேங்கி விட்டன.
பின்னர் மீன்களை பிரெஷ் ஆக வைக்க ப்ரீசர் பெட்டிகளை பயன்படுத்தினார்கள்.அப்போதும் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை.
இறுதியாக ஒரு ஐடியா செய்தார்கள். அது க்ளிக்காகி விட்டது.மீன்வியாபாரம்  ஓஹோ! 
எப்படித்தான் சமாளிச்சாங்க அந்த சவாலை?மீன்தொட்டிகளில் சுறாக் குட்டிகளை போட்டு கொண்டு வருகிறார்கள்.அந்த சுறாக் குட்டிகளிடமிருந்து இதர மீன்கள் தப்பிபதற்காக தொடர்ந்து நீந்திக் கொண்டே இருக்குமாம்.அதனால் புத்துணர்ச்சியுடன் அந்த மீன்கள் இருந்தனவாம்.
நாமும் அப்படித்தான்.எப்போதுமே வேலையும், டி,வி..ரிமோட்டுமாக நமது வாழ்க்கையின் பெரும்பகுதி இருப்பதால்,அலுப்பாகவும்,மந்தமாகவும் கழிகிறது.அவ்வபோது வரும் பண்டிகைகள்  நம்மை  உற்சாகபடுத்துகின்றன   என்றாலும் அதுவும் சில மணித்துளிகள் தான்.மற்றபடி சவால்கள் தான் நம்மை எப்போதும் சுறுப்பாகவும்,உத்வேகத்துடனும் வைத்து இருக்கின்றன. அதற்காக பிரச்சினைகளைத்  தேடி போகவேண்டாம். நம்மிடம் உள்ள ஆற்றல்,தனித்திறமை,உழைப்பு இவை வெளிப்பட்டால் தான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு ஜெயிக்க முடியும்.அது எப்போது சாத்தியம்?தனித்து நின்று சவால்களை எதிர்கொள்ளும்போது  மட்டுமே!
நமக்கு ஒரு சுறாகுட்டி தேவை.சவால் என்கிற பெயரில்.....அப்போதுதான் தெரியும் நம்மால் எவ்வளவு தூரம் தம் கட்டி நீந்த முடியும் என்று!
இனி வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை வந்தால் கண்ணை கசக்கிக்கொண்டு உட்காராமல்,"welcome my dear  சுறாகுட்டி" என்று தைரியமாக வரவேற்போம்.
அது நம்மை,நம் நிஜங்களை நமக்கும்,ஊராருக்கும் அடையாளம்  காட்டும். 

சுற்றுலா அனுபவம்!!!!

மனிதர்களாகிய எல்லாருக்குமே சுற்றுலா ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது.
ராக்கெட் தொழில்நுட்பத்தை  வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய பிறகு,நிருபர்களை சந்தித்தார் அப்துல்கலாம்.அப்போது, 'உங்களுக்கு எப்போது விமானங்கள்,ராக்கெட்டுகள்  மீது ஈர்ப்பு வந்தது ?' என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் -
'என்னுடைய பள்ளி வயதில் பறவைகளின் இயக்கம் பற்றிய பாடத்தை நடத்திய ஆசிரியர், வகுப்பறைக்கு உள்ளேயே அதை முடித்து விடாமல், அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்துக்கு அழைத்துக் சென்றார்.அங்கே பறவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவைகளின் இயக்கம் பற்றி சொல்ல   பிரமிப்பாகவும்,ஆச்சரியமாகவும் இருந்தது.அன்றிலிருந்து ஒரு விமானியாக வர வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது..ஆனால் அது கைகூடவில்லை.எனவே ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான துறையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். எல்லாவற்றுக்கும் முதல் விதை விழுந்தது எங்கள் ஆசிரியர் நேரடியாக பறவைகளைக் காட்டி பாடம் எடுத்ததுதான்."
எல்லாவற்றையுமே,புத்தகங்களிலும்,இணையதளத்திலும் படித்து விட முடியும்.ஆனால் நேரடி அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
அத்தகைய அனுபவம் மனிதர்களாகிய நம் எல்லாருக்குமே அவசியம் தான்.புதிதாக நம் ஒரு ஊரில் போய் இறங்கிய உடனே பல நாட்களாக நாம் அந்த ஊரைப்பற்றி கட்டி வைத்திருந்த கோட்டை பொலபொலவென இடிந்து விழுவதை நாம் உணர முடியும் - ஈகோ முதற்கொண்டு!
அதுதான் சுற்றுலா சொல்லித் தரும்  மிகப்பெரிய பாடம்.
அதற்காக சுற்றுலா என்றதுமே பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த வருடம் குலுமனாலி போனார்கள்,நமக்கு அந்த அளவு போவதற்கு வசதி இல்லை என்று அலுத்துக்கொள்ள வேண்டியதில்லை.நம் வசதிகேற்றபடி நமக்கு அருகிலேயே எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன.அங்கேயும் நாம் தெரிந்துகொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.
"குனியும் போது புத்தகம் படி..
நிமிரும்போதும் உலகம் படி.."
என்ற வைரமுத்துவின் வார்த்தைகளின் படி உலகத்தைப்  படிப்போமாக!.

சினிமா...

இது விஞ்ஞானம் அனுப்பி வைத்த
வித்தியாசமான
வெளிச்ச கருவி!
நாம்தான் அதை
இன்னும்
இருட்டிலேயே
காட்டிக்
கொண்டிருக்கிறோம்!
 
வயல்களில்
சிந்துவதை விட
திரை அரங்குகளின்
வாயிலில்
சிந்தும்
வியர்வைதான்
அதிகம்!
 
உழைத்து முடித்து
வீடு திரும்பும் நாங்கள்...
ஓய்வு  என்று சொல்லி
சினிமா கொட்டகையில்
போய்
விற்றுவிட்டு 
வருகிறோம்
எங்களின் உழைப்பை! 
 
பொழுதுகளை
காசு கொடுத்து
விற்கிறோம்!
கனவுகளை
காசு கொடுத்து
வாங்குகிறோம்!
 
நிஜத்தில் உழைக்காமல்
நிழலில்
ஜெயிப்பதை
நம்புகிறோம்!
 
அமுத சுரபியை
அடகுவைத்து
அன்னமிட்டகை
பார்க்கிறோம்!
 
வன்முறை யாகம் வளர
சினிமாவிலிருந்து
நெய்
ஊற்றுகிறோம்!
 
ஜாதிக்
கரையானுக்கு
சினிமாவில்
புற்றுகட்டி
கொடுக்கிறோம்!
 
சுவரின் நிர்வாணம்
மறைக்க
அதன்மேல்
நிர்வாண
படங்களையே
ஓட்டுகிறோம்!
 
அம்மா
என்பதற்கு
பதிலாக...
எங்கள் குழந்தைகளுக்கு
'அன்பே...'
என்றுதான்
சொல்லிக்கொடுகிறது
சினிமா!
 
நிழல்
காதலுக்கு
பூமாலை
சூட்டிவிட்டு,
நிஜக்காதலுக்கு
தூக்குகயிறு
தயாரிக்கிறோம்!
 
இந்த
சினிமா என்னும்
அற்புதமான கல்லை
சிற்பமாய்
செதுக்குவதற்கான
 உளியை
ரோகிகளின் கையில்
கொடுத்தது யார்?
 
ஒன்று
சிற்பியை
மாற்றுவோம்...
இல்லையேல்
உளியை
உடனடியாக கைப்பற்றுவோம்! ......   பவானிதாசன்.
 

வியாழன், 7 அக்டோபர், 2010

சினிமா அபத்தங்களின் பட்டியல் சில...

இரட்டைப் பிள்ளைகளில் ஒருவர் கெட்டவராக இருப்பார்.
 
ஹீரோ போலீசா இருந்தா,வேலையில் இருந்து நீக்கப்பட்டதும் தான் குற்றவாளியை கண்டு பிடிப்பார்.
 
ஹீரோயின்  சேலையை வில்லன் பிடுங்கியதும் எங்கிருந்தாவது ஓடி வந்து தன்னுடைய சட்டையை கழட்டிக் கொடுப்பார்.உடனே அடுத்த சீனில் ஹீரோயின்  அரைகுறை ட்ரெஸ்ஸில்  ஆட இவரும் கூட ஆடுவார்.
 
ஹீரோவோ,ஹீரோயினோ கடைசி நேரத்தில்.. அதிலும் ரயில்வே ச்டசிஒனில்   தான் ஒன்னு சேருவார்கள்.
 
ஹீரோ அடிவாங்கும் போது கூட முகத்தை சுழிக்க மாட்டார்.ஆனால் தாயோ கதாநாயகியோ காயத்தை துடைத்தால் வலியால் துடிப்பார்.
 
வெடிக்கப் போகும் வெடிகுண்டின் இரண்டு வயர்களில் எதை கட் பண்ணுகிறாரோ அதுதான் சரியாக இருக்கும்.
 
முந்தானைத் தலைப்பு நழுவியதும் ஹீரோவிடம் வெட்கப்படும் ஹீரோயின்,இந்தப் பக்கம் திரும்பி நம் எல்லாருக்கும் காட்டுவார்.
 
வில்லன்  என்ன செய்தாலும் பொறுமையாக இருக்கும் ஹீரோ,தன் மனைவியின் தாலியோ,அல்லது தங்கச்சியின் கற்போ???பறிபோகபோகிறது என்றால்,அப்படியே ஆவேசமாகிவிடுவார்.
 
பார்ப்பவர்களுக்கு ஓவர் செண்டிமெண்ட் டச் கொடுக்கணுமா?உடனே கர்ப்பிணிப் பெண் கதறுவதைக் காட்டுவார்கள்.
 
ஹீரோக்கள் எல்லாரும் சமுதாயத்தை பற்றின அக்கறையோடு இருக்க,ஹீரோயின்கள் மட்டும் சிறுகுழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு,ஹீரோக்களை துரத்தி துரத்தி காதலித்துக் கொண்டு  இருப்பார்கள்.
 
(வெறுப்பா இருக்கு...கொஞ்சம் திருந்துங்கப்பா..)

புதன், 6 அக்டோபர், 2010

புத்துணர்ச்சி தேடி....

இன்றைய உலகில் குறைந்த நேரம்,அதிக வேலை,போட்டிகளுக்கிடையே ஜெயிக்கும் சவால் என்று நம் வாழ்க்கை முறை அவசரமும் டென்சனும்  நிறைந்ததாக மாறிப் போய்விட்டது!...
நாம் அமைதியாக வாழ நினைத்தால் கூட நம்மைக் சுற்றி இருக்கும்  சூழல், அப்படியே தனதாக்கிக்  கொண்டு அதன் டென்சன் களை   நமக்கும்  உள்  செலுத்துகின்றது. 
இதிலிருந்து ரிலாக்ஸ் செய்யத்தான்  நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி தேடி நகைச்சுவை சீன்களை விரும்பி பார்க்கிறோம்.ஆனால் தேவை இருக்கும் அளவுக்கு நமக்கு பார்ப்பதற்கோ ,படிப்பதற்கோ  நிறைய நகைச்சுவை விஷயங்கள் இல்லை என்பதுதான் நிஜம்.
வேலைகளை முடித்து விட்டு சற்றே ரிலாக்ஸ் ஆக காமெடி சீன்களை போட்டுப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.திரும்ப,திரும்ப அதே காமெடி சீன்கள்!..
தேவை ஏற்பட்ட அளவுக்கு சரக்கோ,அதைப் படிப்பவர்களோ இல்லாததுதான்!அதிலும் பெண்கள் என்றால் இன்னும் குறைவு!
எனவே அழுகை சீரியல்கள் எடுக்கும் தொலைக்காட்சி தொடர்இயக்குனர்கள், தங்கள் கவனத்தை நகைச்சுவைத் தொடர்களுக்கு திருப்பினால் ௯௦% மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!...
 
"நகைச்சுவையாக நாம்சிந்தித்து,  எல்லா விஷயங்களையும் லைட்டாக  எடுத்துக் கொண்டால், அது நம் வாழ்க்கைப் பாதையையே கூட மாற்றக் கூடும்."

சனி, 2 அக்டோபர், 2010

Energy Level ஐ அதிகரிக்கும் எந்திரன்!!!!!

எந்திரன் படமாகட்டும்..இல்லை கிரிக்கெட் ஆகட்டும்,ரெண்டுங்கெட்டான் வயதில் இருப்பவர்கள் ஏன் அவ்வளவு உற்சாகம் ஆகிறார்கள்? அதற்கு காரணம் ரஜினியோ இல்லை கிரிக்கெட்டோ   அல்ல. exitement ஆவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு  சுரக்கும் ஹார்மோன்களே ஆகும்.ஆம்,இளம்வயதினருக்கு testosterone என்றhormone அதிகமாக சுரப்பதால் அவர்களுக்கு ஒரு விதமான த்ரில்லிங்  ஓ    இல்லை புத்துணர்ச்சியோ  தேவைப்படுகிறது..எனவே எல்லோரும் ரசிக்கும் விஷயங்கள் அவர்களுக்குள்ளும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு அவர்கள் இந்த மாதிரி விஷயங்களில் லயிக்கும் பொது அவர்களின் hormone level அதிகம் ஆகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.எனவே  தான் பெரும்பாலும் ஆண்களுக்கு ஜல்லிக்கட்டு,சேவல் சண்டை போன்ற விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கிறது.பெண்களுக்கு அதில் அவ்வளவாக நாட்டம் இருக்காது. இவர்களின் இந்த மாற்றங்களால், கிரிக்கெட்டும் எந்திரனும் மற்றும் உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் இன்னபிற விஷயங்களும் குளிர்காய்கின்றன..அவ்வளவே.