செவ்வாய், 12 அக்டோபர், 2010

சினிமா...

இது விஞ்ஞானம் அனுப்பி வைத்த
வித்தியாசமான
வெளிச்ச கருவி!
நாம்தான் அதை
இன்னும்
இருட்டிலேயே
காட்டிக்
கொண்டிருக்கிறோம்!
 
வயல்களில்
சிந்துவதை விட
திரை அரங்குகளின்
வாயிலில்
சிந்தும்
வியர்வைதான்
அதிகம்!
 
உழைத்து முடித்து
வீடு திரும்பும் நாங்கள்...
ஓய்வு  என்று சொல்லி
சினிமா கொட்டகையில்
போய்
விற்றுவிட்டு 
வருகிறோம்
எங்களின் உழைப்பை! 
 
பொழுதுகளை
காசு கொடுத்து
விற்கிறோம்!
கனவுகளை
காசு கொடுத்து
வாங்குகிறோம்!
 
நிஜத்தில் உழைக்காமல்
நிழலில்
ஜெயிப்பதை
நம்புகிறோம்!
 
அமுத சுரபியை
அடகுவைத்து
அன்னமிட்டகை
பார்க்கிறோம்!
 
வன்முறை யாகம் வளர
சினிமாவிலிருந்து
நெய்
ஊற்றுகிறோம்!
 
ஜாதிக்
கரையானுக்கு
சினிமாவில்
புற்றுகட்டி
கொடுக்கிறோம்!
 
சுவரின் நிர்வாணம்
மறைக்க
அதன்மேல்
நிர்வாண
படங்களையே
ஓட்டுகிறோம்!
 
அம்மா
என்பதற்கு
பதிலாக...
எங்கள் குழந்தைகளுக்கு
'அன்பே...'
என்றுதான்
சொல்லிக்கொடுகிறது
சினிமா!
 
நிழல்
காதலுக்கு
பூமாலை
சூட்டிவிட்டு,
நிஜக்காதலுக்கு
தூக்குகயிறு
தயாரிக்கிறோம்!
 
இந்த
சினிமா என்னும்
அற்புதமான கல்லை
சிற்பமாய்
செதுக்குவதற்கான
 உளியை
ரோகிகளின் கையில்
கொடுத்தது யார்?
 
ஒன்று
சிற்பியை
மாற்றுவோம்...
இல்லையேல்
உளியை
உடனடியாக கைப்பற்றுவோம்! ......   பவானிதாசன்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக