வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மனம் என்னும் அடிமை...


இன்று ஒரு தொலைக்காட்சியில் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு கேட்க நேர்ந்தது. அவர் கூறிய அருமையான நீதிக்கதை அது.ஒரு நாட்டில் அரசர் ஒருவர் வெகு சிறப்பாக ஆண்டு கொண்டு இருக்கிறார்.அவருக்கு வாய்த்த ஒரு அடிமை அவருக்குத் தேவையான எல்லாப்  பணிகளையும் மிக அருமையாக செய்து அவரிடம் நற்பெயர் பெறுகிறான். அவனுடைய சேவையில் மகிழ்ந்த அரசர் ஒரு நாள் அவனிடம் "உனக்கு என்ன வேண்டுமோ என்னிடம் கேள், நான் அதை நிறைவேற்றி வைக்கிறேன்" என்றார்.
அவனும் சிறிதும் யோசிக்காமல் மன்னரே நான் உங்களைபோல அரசராக தர்பாரில் ஒரு நாள் மட்டும் வீற்றிருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.
அதைக் கேட்ட அரசர் அதிர்ந்து போனார்.இருப்பினும் சற்று சுதாரித்துக்கொண்டு "சரி அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டு,தன் அமைச்சர்களிடம் "அந்த அடிமை அரசரானால் அவன் ஆணையிடும் எல்லா  கட்டளைகளையும் எனக்கு நிறைவேற்றுவது போலவே நிறைவேற்றவேண்டும்" என்று கூறினார்.
அடிமையும் அரசர் ஆனான்.அவன் பதவியேற்ற மறுகணமே அரசரின் தலையைத் துண்டிக்க  வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.அனைவரும் அதிர்ந்தனர்.ஆனாலும் அவன்தானே இப்போது அரசன்?..எனவே வேறு வழியில்லாமல் அவன் கட்டளைப்படி தண்டனையை நிறைவேற்றினர்.அதன் பின் அவனே மீதியான காலங்களில் அரசராக இருந்தான்.இது ஒரு விபரீதக் கதைதான்.
இதை போன்றதுதான் நம்முடைய வாழ்கையும்.இந்த கதையில் வருவது போல நாம் தான் அரசர்கள்.நம்முடைய மனம்தான்  அந்த அடிமை. நம்மில் நிறையப் பேர் அந்த அரசனைப் போல மனம் நமக்கு விரும்பினதைச் செய்தவுடன்,அந்த மனதை அரசராக்கி விடுகிறோம்.ஆனால் அதன் பின் வரும் விளைவுகளைப் பார்த்தால், நாமும் அந்த அரசனைப் போல செத்து விட நேர்கிறது..ஆம்,மனம் என்னும் அடிமை சொன்னவாறு செய்தால்,நம்முடைய தகுதி,ஆளுமைத்திறன்,பாரம்பரியம் எல்லாமே செத்து விடுகிறது.
நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாம் விழித்து இருக்கும் போது எடுக்கப்பட வேண்டும்.மனம் என்னும் அடிமையின் வசம் ஒப்படைத்த பின்னர் நமக்குள் இருக்கும் நியாய தர்மங்கள் செத்து விடும்.
எனவே  தான்  குடிப்பழக்கமோ,புகைப்பிடிக்கும் பழக்கமோ முதலில் ஆரம்பிக்கும் போது நம்  அறிவு அதை ஏற்றுக்கொள்ள மறுத்து உடலின் வழியே வெளித்தள்ளுகிறது. ஒவ்வாமை ஏற்படுகிறது.அதையும் மீறி நாம் மனம் சொன்னபடி செய்தால் அந்த அரசரைப்  போல செத்தவர்களாகி விடுவோம்.
         "கண் போன போக்கிலே கால் போகலாமா...
           கால் போன போக்கிலே மனம்  போகலாமா..."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக