செவ்வாய், 14 டிசம்பர், 2010

தலையாட்டி பொம்மைகள்?????

எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, யார் எது சொன்னாலும் சரி என்று சொல்லுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.இப்படி எல்லோருக்கும் நல்லவனாக நினைத்தால் கடைசியில் எல்லாருக்கும் கெட்டவனாகி விடுவோம் என்பதுதான் உண்மை.
'சரி என்று சொல்வது ரொம்ப எளிது. சொன்னபடி அதைச் செய்வது ரொம்பக் கஷ்டம். ஆரம்பத்தில் எல்லோருக்கும்'சரி' என்று சொல்லி வேலையை இழுத்துப் போட்டு செய்யும் பொது அனைவரது பாராட்டையும், அபிமானத்தையும் பெறலாம். ஒரு நிலையில், 'இவன் என்ன சொன்னாலும் கேட்பான்' என்ற மனோபாவத்தை நீங்களே எல்லோர் மனத்திலும் விதைத்து விடுகிறீர்கள்.
விளைவு, என்றைக்காவது  ஒரு நாள் வேறு வழியே இல்லாமல் நீங்கள் முடியாது என்று சொல்லுகிற பொது, 'இவன் முன்னைப் போல் இல்லை' என்ற பேச்சு முளைக்க ஆரம்பிக்கும்.அந்த வேலைகளை செய்யமுடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற விவரம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் 'சரி' சொல்லிக் கொண்டு இருப்பீர்கள். கொஞ்ச காலத்தில் களைத்து போய், தேர்வு செய்து 'சரி' சொல்ல முனைவீகள். இப்போது 'இவன் முன்ன மாதிரி இல்லை' என்ற குற்றச் சாட்டு அதிகமாகி இருக்கும்.
எல்லோருக்கும் நல்லவனாக எடுத்த முயற்சி இப்போது உங்களுக்கு எதிராக நிற்கிறது. போதாகுறைக்கு இவர்களுக்கு எவ்வளவு செய்தோம், 'கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் என்னை விமர்சிக்கிறார்களே' என்ற மன உளைச்சல் வேறு.
நீங்கள் பகுத்தறிவும், ஞானம் இல்லாதவர் என்பதைத்தான் எல்லாவற்றுக்கும்'சரி' சொல்வதன் மூலம் வெளிப்படுத்துகிறீர்கள். 'சரி' சொல்வதைப் போல 'முடியாது' என்று சொல்வது எளிதான காரியம் இல்லைதான். ஆனால் குறைந்த பட்சம், 'கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்', யோசித்துச் சொல்லுகிறேன்' என்று சொல்லலாமே. 
முடியாத விஷயங்களுக்கு நாகரிகமாகவும்,நாசூக்காகவும் எதிரில்  இருப்பவர்களுக்கு புரியும் படியாகவும் சொல்லுகிற பயிற்சி நமக்கு வேண்டும். நியாயமான விஷயங்களுக்கு மட்டும் 'சரி' என்று சொல்லிவிட்டு, அதனை முடித்துக் கொடுப்பது உத்தமம்.எனவே 'தலையாட்டி பொம்மையாக எப்போதும் இருக்காதீர்கள்!'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக